ஆளுநருக்கு பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, யூசுப் தாரிகாமி கடிதம்
ஸ்ரீநகர், ஜூலை 26- பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை மூன்றாகப் பிரித்து சிதைத்தது.அன்றிலிருந்து அந்த மாநில மக்கள் சொல்லொண்ணா கொடுமைகளுக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது மாவட்ட மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாமல் சிகிச்சை பெற மக்களும் உள்நோயாளிகளும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா, முன்னாள் முதல்வரும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முப்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் யூசுப் தாரிகாமி ஆகியோர் ஆளுநர் மனோஜ் சின்ஹாவிடம் மக்களின் மருத்துவம் மற்றும் சுகாதாரப் பிரச்சனையில் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் அளித்தனர். அக்கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளில் பல முன்னேற்றங்களை அடைந்து, மாநில மக்களுக்கான மருத்துவ சேவையில் முதன்மை யானதாக திகழ்கிறது. தற்போது இங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 1250 ஆக உயர்ந்துள்ளது (தாய்-சேய் பிரிவில் உள்ள 129 படுக்கைகள் உட்பட). வடமாநிலங்களில் உள்ள மருத்துவமனை களில், இரண்டாவது சிறந்த மருத்துவமனையாக இது திகழ்கிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, மருத்துவ பயிற்சியும் ஆராய்ச்சியும் நடத்தப்படுகின்றது. இளநிலை, முதுநிலை முதல் முனைவர் பட்டம் வரையிலான படிப்புகளும் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. திறமை வாய்ந்த மருத்துவர்களையும் ஆராய்ச்சிகளையும் உருவாக்கி இருக்கிற இந்நிறுவனம், தேசிய-சர்வதேச அளவிலான கருத்தரங்குகளையும் நடத்துகிறது. ஆனாலும், இம்மருத்துவமனையில் நோயாளிகளுக்கான சேவை உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப் பட்டுள்ளன.
7 ஆண்டுகளாக ஆட்சேர்ப்பு இல்லை
சமீபத்தில் இம்மருத்துவ நிறுவனத்தின் தன் னாட்சியை நீக்குவதாக அரசு அறிவித்திருக்கிறது. இது இந்நிறுவனத்தின் செயல்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது இங்கு மருத்துவம், மருத்துவ உதவியாளர், நிர்வாக அலுவலர்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. செவிலியர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் 50 சதவீத பற்றாக்குறை நிலவுகிறது. கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சேர்ப்பு எதுவும் நடைபெறவில்லை. 115 பயிற்றுநர்கள், 149 அரசுசார் பதவிகள், 870 அரசுசாரா பதவிகள் மற்றும் 67 இளநிலை-முதுநிலை அலுவலர்கள் உட்பட 1201 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுமட்டுமின்றி, போதிய உட்கட்டமைப்பு மற்றும் நிதியுதவி இல்லாததால் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடுகிறது. இங்குள்ள 3 சி.டி. ஸ்கேன் இயந்திரங்களில் ஒன்று மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது. புற்றுநோய் நோயாளிகளுக்கான லீனியர் ஆக்சிலேட்டர் என்ற முக்கிய கருவி ஒன்றுகூட இல்லை. மகப்பேறு பிரிவில் போதிய இடவசதி இல்லாததால் பெரும் சிரமங்களுக்கு ஆளாகின்ற னர். நிதி பிரச்சனையால், இம்மருத்துவமனையில் எந்தவித உயர்தர சிகிச்சைகளும் மேற்கொள்ளப் படவில்லை. ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.400 கோடியில் 70 சதவீதம் ஊதியம் வழங்கு வதற்கே செலவாகிறது. மேலும், இந்நிறுவனம் செவிலியர் கல்லூரியையும் நடத்துகிறது.
ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனம் போன்ற பிற முதன்மை மருத்துவ மனைகளும் இத்தகைய சிக்கல்களை எதிர்கொள்கின்றன. பெமினாவில் உள்ள ஸ்ரீநகர் குழந்தைகள் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. பர்சுலாவில் உள்ள எலும்பு மூட்டு மருத்துவமனையில் கடந்த 2022 இல் நடந்த தீ விபத்தில், முதல் தளத்தில் உள்ள வார்டுகள் சேதமடைந்தன. ஆனாலும், மருத்துவமனை அதே கட்டிடத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது. உலக வங்கி நிதியுதவியுடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு கூடுதலாக 120 படுக்கை வசதிகளை கொண்ட புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவை இன்னும் நிறைவடையவில்லை.
சேவை தரத்தை மேம்படுத்துக!
ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட அளவில் உள்ள பல மருத்துவமனைகள் சேதமடைந்த நிலையில், அவை வண்ணப்பூச்சுகள் மூலம் வெளித்தோற்றத்தில் புதுப்பிக்கப்படுகின்றன. இத்தகைய மருத்துவமனைகளில் ரேடியோதெரபி சிகிச்சைக்கான வசதி இல்லாததால், புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவோர் சொல்லொண்ணா துயரத்தை சந்திக்கின்றனர். இதனால் அவர்கள் ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது அதிக பணம் செலவழித்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். காலிப் பணியிடங்களை நிரப்பாததால், ஏற்கனவே பணியில் இருக்கும் ஊழியர்கள் அதிக பணிச்சுமைக்கு ஆளாகின்றனர். காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனம் உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறையை போக்குவது மட்டுமின்றி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சேவை தரத்தையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. எனவே, காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மிக விரைவில் நடவடிக்கை எடுத்து, முதன்மை மருத்துவமனைகள் தடையின்றி செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.