states

img

சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை கோரி ராகுல் காந்தி மேல்முறையீடு!

சூரத், ஏப்.3- குற்றவியல் அவதூறு வழக்கில், தனக்கு  விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை  எதிர்த்து, குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட  அமர்வு நீதிமன்றத்தில், ராகுல் காந்தி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.  இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ள சூரத் மாவட்ட அமர்வு நீதி மன்றம், இதன்மீது ஏப்ரல் 13 அன்று விசாரணை  நடைபெறும் என்றும், அதற்கு முன்னதாக ராகு லின் இந்த மேல்முறையீட்டின் மீது, அவர்மீது  ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த மனுதாரர் பூர்னேஷ் மோடி எம்எல்ஏ-வும், குஜராத் அரசும்  ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல்  செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட  ஜாமீனை ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நீட்டித் துள்ள சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம், இவ்  வழக்கில் விசாரணை முடியும் வரை, ராகுலின் தண்டனையை நிறுத்தி வைக்கும் உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 2019 மக்க ளவைத் தேர்தலையொட்டி, கர்நாடக மாநிலம்  கோலாரில் ஏப்ரல் 13 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்  போது, “நீரவ் மோடி, லலித் மோடி அல்லது  நரேந்திர மோடி என அனைத்துத் திருடர்களின்  பெயர்களிலும் மோடி என்று ஏன் இருக்கிறது”  என்று கிண்டலாக கேள்வி எழுப்பினார்.

ராகுலின் இந்தப் பேச்சானது, பிரதமர் நரேந்திர மோடியை மட்டுமல்லாது, ஒட்டு மொத்த ‘மோடி’ சமூகத்தினருக்கும் களங்  கத்தை ஏற்படுத்தி விட்டதாக பாஜக எம்எல்ஏ-வும் குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி 2019-ஆம் ஆண்டு வழக்கு  தொடர்ந்தார். 2021-இல் ராகுல் மீது வழக்கு  பதிவு செய்யப்பட்டது. எனினும் 3 ஆண்டு களாக கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கு,  2023 பிப்ரவரி 21-க்குப் பிறகு, திடீரென தூசு  தட்டப்பட்டது. ஒரு மாதத்திற்குள் விசாரணைகள் அனைத்  தையும் முடித்து, சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிபதி எச்.எச். வர்மா கடந்த மார்ச் 23 அன்று தீர்ப்பு வழங்கினார். இந்திய தண்டனை சட்டப் பிரிவு 504-இன் கீழ் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த அவர்,  ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை  வழங்கினார். உடனடியாக ராகுல் காந்தி பிணைக்கு முறையிட்ட நிலையில், அவருக்கு பிணையும் வழங்கிய நீதிபதி எச்.எச். வர்மா, மேலும், 30 நாட்களுக்குள் தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம் எனவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்தார். ஆனால், தீர்ப்பு உத்தரவு வெளியான 24 மணிநேரத்திற்குள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8-ன் படி 102(1)(e) அடிப்படை யில், குற்றவியல் அவதூறு வழக்கில் 2 ஆண்டு  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராகுல்  காந்தி, எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம்  செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தேர்ந்தெடுக்  கப்பட்ட கேரளா மாநிலம் வயநாடு தொகுதி  மக்களவை தொகுதி காலியாக இருப்பதாக வும் அறிவிக்கப்பட்டது. 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்த சூரத்  மாவட்ட நீதிமன்றமே, 30 நாட்களுக்கு தண்ட னையை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித் துள்ள பின்னணியில், எம்.பி. பதவியை பறித்தது அரசியல் பழிவாங்கல் என்றும், இது  சட்ட விரோதம் என்றும் விவாதங்கள் எழுந்தன.  இதுதொடர்பாக ராகுல் காந்தி மேல்முறையீடு  செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. 

இதையடுத்து, ஏப்ரல் 3 அன்று ராகுல் காந்தி  மேல்முறையீடு செய்வார் என்று தகவல்கள் வெளியாகின. அதன்படியே, ராகுல் காந்தி திங்களன்று காலை தனது தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோ சனை நடத்தினார். பின்னர், இண்டிகோ விமானம் மூலம் சூரத்  நகருக்குச் சென்ற ராகுல் காந்தி, சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்  தீர்ப்பை எதிர்த்து, சூரத் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் இரண்டு மேல்முறையீட்டு மனுக் களைத் தாக்கல் செய்தார். அதாவது, தனக்கு  விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு மனுவும், தீர்ப்பையே ரத்து செய்ய வேண்டும் என்று மற்றொரு மனு வையும் தாக்கல் செய்தார். “அவதூறு வழக்கில் குற்ற தண்டனை விதித்த மாஜிஸ்திரேட்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் விசா ரணை முடியும் வரை இந்த தீர்ப்புக்கு இடைக்  கால தடை விதிக்க வேண்டும்” என்று மனு வில் வலியுறுத்தினார்.

இம்மனுக்களை விசாரித்த சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம், சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை கோரும் மனு மீது ஏப்ரல்  13-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று,  இதுதொடர்பாக மனுதாரர் பூர்ணேஷ் மோடி,  குஜராத் அரசு தரப்பில் ஏப்ரல் 10-ஆம் தேதிக்  குள் பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். மேலும், ராகுலுக்கான ஜாமீனை ஏப்ரல் 13 வரை நீட்டிப்பதாகவும்- ராகுலின் சிறைத்  தண்டனையை நிறுத்தி வைக்கும் உத்தரவும்- இவ்வழக்கில் விசாரணை முடியும் வரை, நீட்டிக்கப்படுவதாகவும் அறிவித்தார். அதேபோல, அவதூறு வழக்கில் குற்ற வாளியாக அறிவிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக  தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கின் விசா ரணை மே 3 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது ஜனநாய கத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம். இந்தப் போராட்டத்தில் உண்மையே என்  ஆயுதம். உண்மையே எனக்கான உறுதுணை”  என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த மேல்முறையீட்டின் போது, பிரியங்கா காந்தி ராஜஸ்தான் முதல்வர்  அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ்  பாகேல், இமாசலப் பிரதேச முதல்வர் சுக்விந்  தர் சிங் சுகு ஆகியோரும் ராகுலுடன் சூரத் சென்றிருந்தனர்.

திடீரென உயிர்பெற்று தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னணி

குஜராத் முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாஜக எம்எல்ஏ-வுமான பூர்ணேஷ் மோடியால், 2019 ஏப்ரல் மாதத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு, ஏறத்தாழ 2 ஆண்டுகள் 2021 வரை கிடப்பில் இருந்தது. 2021 அக்டோபரில்தான் இந்திய தண்டனைச் சட்டம் 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ராகுல் காந்தியும் இவ்வழக்கில் 2021 அக்டோபரில் சூரத் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ஆனால், 2022 மார்ச் மாதம், குஜராத் உயர் நீதிமன்றத்திற்குச் சென்ற பூர்ணேஷ் மோடி, ராகுலுக்கு எதிரான தன்னுடைய வழக்கை விசாரிக்கக் கூடாது; அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம் அதனை ஏற்று, ராகுலுக்கு எதிரான வழக்கை விசாரிக்கத் தடை விதித்தது. இதனால், 2022 மார்ச் முதல் மேலும் ஓராண்டுக்கு விசாரணையே நடைபெறவில்லை.

இதனிடையே, 2023 பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர்  உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி, அதானியின் பங்குச்  சந்தை ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும், கேள்விகளையும் எழுப்பிய பின்னணியில், ராகுல் காந்திக்கு எதிரான தனது வழக்கை விசாரிக்கக் கூடாது என்று தானாகவே சென்று 2022-இல் தடைபெற்ற பாஜக எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி, ராகுலின் அதானி மீதான குற்றச்சாட்டுக்குப் பிறகு உடனடியாக குஜராத் உயர் நீதிமன்றத்  திற்குச் சென்று விசாரணைக்கு விதிக்கப்பட்டி ருந்த தடையை விலக்குமாறு கோரிக்கை வைத்தார். நீதிமன்றமும் அதனை ஏற்றுத் தடை விலக்கியது. இந்தக் காலத்தில், ராகு லின் வழக்கை முன்பு விசாரித்து வந்த சூரத் மாவட்ட நீதிபதியும் மாற்றப்பட்டு, புதிய நீதிபதி பதவியேற்றுக் கொண்டிருந்தார். இந்தப் பின்னணியில், 3 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த ராகுலுக்கு எதிரான குற்ற வியல் அவதூறு வழக்கு, பிப்ரவரி 21 முதல்  மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்பட்டு, 30 நாட்களுக்குள் மிக விரைவாக நடத்தப்பட்டு, மார்ச் 23 அன்று தீர்ப்பு வழங் கப்பட்டது.