சென்னை, செப். 18- நீட் தேர்வு ரத்து செய்ய கோரி திமுக இளைஞர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திமுக இளைஞரணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் வேலூரில் நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை குடியரசுத் தலைவருக்கு தெரிவிக்கும் வகையில் மிகப்பெரிய கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளோம்” என்றார். மாணவர், ஆசிரியர், பெற்றோர், பொது மக்களிடம் குறைந்தது 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற வேண்டும். நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பான்மையான மக்களிடம் இருக்கிறது என்பதை நிரூபிக்க இது ஒரு வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்தார். இந்த 50 லட்சம் கையெழுத்துடன் அவர்களின் பெயர், முகவரி, அலை பேசி எண்ணையும் வாங்கி வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி சேலத்தில் நடை பெறும் இளைஞர் அணி மாநாட்டில், மாநாட்டு திடலில் தலைவரிடம் ஒப்ப டைப்போம் என்றும் அவர் கூறினார்.