ஆர்எஸ்எஸ்-பாஜக வகையறாவின் அறிவிக்கப்படாத அதிகாரப்பூர்வ ஏடாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது தினமலர் ஏடு. அன்றாடம் பாஜகவுக்கும், ஒன்றிய அரசுக்கும் நடைபாவாடை விரிப்பதுதான் அந்த ஏட்டின் வாடிக்கை. ‘நடுநிலை ஏடு’ என்று கூறிக் கொண்டு செய்திகளை திரித்து திருகுதாள வேலை செய்வதையே தனது திருப்பணியாக செய்து வருகிறது அந்த ஏடு. தினமலர் வெள்ளிதோறும் வெளியிடும் ஆன்மீக மலரில் வெளிவரும் புராணக் கதைகளை விஞ்சும் வகையில், 7.10.2023 அன்று ‘பழனிசாமிக்கு முக்கியத்துவம், மார்க்சிஸ்ட் நிலையில் மாற்றம்’ என்ற தலைப்பில் புளுகுமூட்டை ஒன்றை அவிழ்த்துவிட்டுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பலாக மாறிக் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் ‘தலைதப்பித்தால் தம்பிரான் புண்ணியம்’ என்று ஓட்டம் பிடித்து வருகின்றனர். பாஜகவோடு ஒட்டிக் கொண்டிருந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அந்த கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் நாமும் மூழ்கிவிடுவோம் என்று பயந்து அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டது. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதை அந்தக் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அறிவித்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லையே என்று, பருத்திவீரன் படத்தில் ‘அதை உங்கள் ஓனரை சொல்லச் சொல்லு’ என்பது போல பாஜகவினர் கூறிவந்தனர். இந்த நிலையில், பாஜக கூட்டணியிலிருந்து விலகியது அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவு என எடப்பாடி பழனிசாமி கூறியதை தீக்கதிர் நாளேடு செய்தியாக வெளியிட்டிருந்தது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி அறுந்து தொங்குவதால் பீதியடைந்துள்ள தினமலர் ஏடு, இந்த ஒரு செய்தியை வைத்துக் கொண்டு மார்க்சிஸ்ட் நிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக தன் மனக் கயிறை மணல் கயிறாக திரித்து மகிழ்ந்துள்ளது. தீக்கதிர் நாளேட்டின் நெல்லைப் பதிப்பு துவக்கவிழாவில் பேசிய கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், அகில இந்திய அளவில் “இந்தியா கூட்டணி”யை உருவாக்கியதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முக்கியப் பங்கு உண்டு. தமிழகத்தில் திமுக தலைமையிலான அணி அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணிக்கு முன்மாதிரியாக விளங்குகிறது என்று தெளிவாக குறிப்பிட்டார்.
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அண்ணாமலை மட்டும்தான் அதிமுகவுக்கு பிரச்சனையா? நரேந்திரமோடி தலைமையிலான ஒன்றிய அரசு மக்கள் விரோத கொள்கைகளை அதிமுக விமர்சிக்க தயங்குவதேன் என்று கேள்வி எழுப்பியிருந்தார். மோடி ஆட்சியில் 9 ஆண்டு கால மோசமான ஆட்சி குறித்து அதிமுக ஒரு வார்த்தை கூட கண்டிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாஜக நடத்தும் வெறுப்பு அரசியல் அதிமுகவுக்கு பிரச்சனை இல்லையா? என்று வினா தொடுத்தார். கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கூட மோடி அரசை எல்லாவிதத்திலும் தூக்கி வைத்து பாராட்டித்தான் அதிமுக பேசியது. அண்ணாமலை மட்டும்தான் இவர்களுக்கு பிரச்சனை என்று கூறுவதால் நாளைக்கு ஏதாவது சமரச உடன்பாட்டுக்கு இவர்கள் போக மாட்டார்கள் என கூற முடியாது என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறியிருந்தார். மோடி அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றை அதிமுக நாடாளுமன்றத்திலும், வெளியிலும் ஆதரித்தது. பொது சிவில் சட்டம் கொண்டு வரப் போவதாக பிரதமர் மோடி அறிவித்த போது, அதை எதிர்க்க அதிமுக துணியவில்லை. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என மோடி அரசு முன்பு அறிவித்த போது, அதை எதிர்த்த அதிமுக இப்போது அதே அறிவிப்பை வரவேற்றுள்ளது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. தீக்கதிர் நாளேடு பக்கம் பக்கமாக அதிமுகவின் சந்தர்ப்பவாத, சமரச நிலையை அம்பலப்படுத்தி எழுதி வந்துள்ளது; வருகிறது. அப்போதெல்லாம் தினமலர் ஏடு மோடி ஆட்சிக்கு முரட்டு முட்டாக கொடுத்துக் கொண்டிருந்தது.
தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான அணிவகுப்பு பலமாக இருப்பதால் அரண்டு போயுள்ள தினமலர் தனது சிண்டு முடியும் வேலையை செய்து ஏதாவது சிக்கல் ஏற்படுத்த முடியுமா என ஆலாய்ப் பறக்கிறது. செய்திகள் என்ற பெயரில் விஷமம் செய்கிறது. குறைந்தபட்ச ஊடக நெறியை கூட பின்பற்றாத ஒரு பத்திரிகை அது. அதனால்தான் முதல்வர் துவக்கி வைத்துள்ள அற்புதமான திட்டமான காலை உணவுத் திட்டத்தை தரம்தாழ்ந்த முறையில் தலைப்பு செய்தி ஆக்கியது. “மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு; ஸ்கூல் கக்கூஸ் நிரம்பிவழிகிறது” என கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது அந்த ஏடு. இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. தினமலர் ஏட்டை மக்கள் கழுவிக் கழுவி ஊற்றினார்கள். அதனுடைய விற்பனையும் சரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஏடு, ‘நான் அவனில்லை’ என்று பம்மி, பங்காளி பகையை காரணம் காட்டியது. இவ்வாறு வக்கிரமாக நடந்து கொள்வது அந்த ஏட்டை பொறுத்தவரை தற்செயல் நிகழ்வு அல்ல. வாடிக்கையான ஒன்றுதான். வாச்சாத்தி வழக்கில் உயர்நீதிமன்றம் நீதியை நிலைநாட்டும் தீர்ப்பை வழங்கியுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கை தன் முதுகில் சுமந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வந்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு வரி பாராட்ட தினமலருக்கு மனமில்லை. வாச்சாத்தி தீர்ப்பு தொடர்பாக தீக்கதிரில் பக்கம் பக்கமாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அண்ணாமலையை யாரும் அசைக்க முடியாது என்று லாலி பாடி, ஜால்ரா சத்தத்திற்கு சுதி சேர்த்துக் கொண்டிருக்கிறது இந்த ஏடு.
பெரும்பாலான ஊடகங்களை வளைத்து உண்மையை ஊறுகாய் போட்டு ஊறவைத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு. தில்லியில் ‘நியூஸ் கிளிக்’ இணைய பத்திரிகையை குறிவைத்து குதறுகிறது ஒன்றிய அரசு. உண்மையை உரக்கச் சொன்ன ஒரே காரணத்திற்காக ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு காராகிரகத்தில் பூட்டப்படுகின்றனர். இதுகுறித்தும் தீக்கதிர் தினந்தோறும் செய்தி வெளியிடுகிறது. சக ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்படுவது கண்டு ஒரு கமா அளவுக்குக் கூட கண்டித்ததில்லை தினமலர் ஏடு. ஆனால், இல்லாத பெருமைகளையெல்லாம் மோடி அரசுக்கு பாமாலையாக சூட்டுவதிலேயே குறியாக இருக்கிறது அந்த ஏடு. நாயக்கனேரி ஊராட்சித் தலைவர் பதவியேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியதைக் கூட மாநில ஆட்சிக்கு எதிரானது என்பது போல சித்தரிக்க முயன்றுள்ளது தினமலர். பட்டியலினத்தைச் சேர்ந்த அந்த ஊராட்சிமன்றத் தலைவர் பதவியேற்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுவது என்பது சமூக நீதி நிலைபெற வேண்டும் என்ற நியாயத்தின் அடிப்படையிலானது. கலைஞர் முதல்வராக இருந்த போது, அருந்ததிய மக்களுக்கு உள்ஒதுக்கீடு, உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் தகர்ப்பு, பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டாக்காச்சியேந்தல் ஆகிய பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளுக்கு தேர்தல் போன்றவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் போராடியும் தீர்வு கண்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பது வரலாறு. இத்தகைய நிலைப்பாடுகளும், செயல்பாடுகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரித்துக் கொண்டுள்ள வர்க்கக் கடமையின் பாற்பட்டது.
தற்போது கூட உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் வாச்சாத்தி மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு மக்கள் தொடர்புடைய பல்வேறு நல கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வுகாணவும் கோரியுள்ளனர். இத்தகைய பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து செய்து வந்துள்ளது. கொடுமையே உருவான நரேந்திரமோடி தலைமையிலான ஒன்றிய பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெளிவான, தீர்க்கமான முடிவு. அதற்காக அகில இந்திய அளவிலும், தமிழகத்திலும் தெளிவான முடிவெடுத்து செயல்பட்டு வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. பாஜகவுக்கு பாதசேவை செய்வதையே நித்தியக் கடனாக கொண்டுள்ள தினமலர் ஏடு, தன்னுடைய திருகல் வேலைக்கு வேறு திசையைப் பார்க்கட்டும்.