புதுதில்லி, ஆக.3- ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அகில இந்திய எல்ஐசி பென்சனர்கள் சங்கத்தின் தலைவர் சதன் ஜிப்தாஸ், பொதுச்செயலாளர் குன்னிகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ஆகியோர் புதனன்று தில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். அப்போது அமைச்சரிடம் சங்கத் தலைவர்கள் கூறுகையில், 30 சதவீதம் குடும்ப பென்சன் உயர்வுக்கு எல்ஐசி நிர்வாகக்குழு பரிந்துரை செய்து 4 வருடங்களும், பொதுக்காப்பீட்டு நிர்வாகக்குழு பரிந்துரை செய்து 2 வருடங்களும் கடந்துவிட்டன. நிதி அமைச்சகம் கோரிய விளக்கங்களும் எல்ஐசி, ஜிஐசி நிர்வாகங்களால் அளிக்கப்பட்டும் நீண்ட நாட்கள் ஆகி விட்டன. ஆனால் நிதி அமைச்சகம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனால் சொற்பத் தொகையில் குடும்பச் செலவுகளை ஈடு கட்டும் கடினமான சூழ்நிலையை இன்சூரன்ஸ் ஓய்வூதியர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் குடும்ப பென்சனர்கள் அதிக எண்ணிக்கையில் மரணம் அடைந்துள்ளனர் என்றும் மேலும் ரிசர்வ் வங்கி, பொதுத்துறை, நபார்டு, ஆர்ஆர்பி வங்கிகளில் வழங்கப்படும் 30 சதவீதம் குடும்ப பென்சன் போன்று எல்ஐசி / ஜிஐசியிலும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், மற்ற நிறுவனங்களில் 30 சதவீதம் குடும்ப பென்சன் வழங்கும் நிலையில் எல்ஐசி / ஜிஐசியிலும் வழங்கத் தடையில்லை . பென்சனர்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு ஆவன செய்வதாக நிதியமைச்சர் உறுதியளித்தார். 1.8.97-க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி எல்ஐசியில் குறைவாக உள்ளது. வங்கிகளில் இதை சரி செய்ய வங்கி நிர்வாகங் கள் முன்வந்துள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டது. இது குறித்த மனு ஒன்றும் அமைச்சரிடம் அளிக்கப்பட்டது.