பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த விடுதலைப் போரில் மாணவர் சமுதாயத்தின் பங்களிப்பு மகத்தானது. 1930 ஆம் ஆண்டுகளில் பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக இங்கிலாந்து சென்ற மாணவர்களில் பலர் மார்க்சிய சிந்தனையால் ஈர்க்கப்பட்டனர். இந்தியா திரும்பியதும் அவர்கள் விடுதலைப் போராட்ட வேள்வியில் குதித்தனர். பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி, ஜோதிபாசு, பூபேஷ்குப்தா, இந்திரஜித் குப்தா, மோகன் குமாரமங்கலம், பார்வதி கிருஷ்ணன், ரேணு சக்கரவர்த்தி, சி.எஸ்.சுப்பிரமணியம், வி.ஜி.ராவ், ஏ.ராமச்சந்திரன் போன்ற பலரை குறிப்பிடலாம். அதற்கு முன்னதாக ஹோசியாபூர் மாஜிஸ்திரேட் வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றிய பள்ளி மாணவர் ஹரிகிஷன்சிங் சுர்ஜித் துப்பாக்கிச் சூட்டில் நூலிழையில் உயிர் பிழைத்து சிறை சென்றார். பொதுவுடமை இயக்கத்தின் பிதாமகன்களாக கருதப்படும் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், பி.சுந்தரய்யா, பி.ராமமூர்த்தி ஆகியோர் கல்லூரி படிப்பு காலத்திலேயே கைதாகி சிறை சென்று விடுதலைப் போராட்ட வேள்விக்கு உரமூட்டினர். இத்தகைய சூழலில் இந்திய மாணவர் சமூகத்தில் அலை வீசி எழுந்த புரட்சிகர போக்கை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் 1936ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (ஏஐஎஸ்எப்) உருவாக்கப்பட்டது. ஏ.ஐ.எஸ்.எப். இயக்கத்தின் வீரமிக்க பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் 1970ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ) உருவானது. 1970ஆம் ஆண்டு டிசம்பர் 27 முதல் 30 வரை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாடு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
பள்ளி ஆசிரியர் பணியைத் துறந்து இளம் வயது முதல் விடுதலைப் போராட்டத்திலும், சுதந்திர இந்தியாவில் அவசர நிலைக் காலம் வரை போராட்டத்தை தனது உயிர்மூச்சாக கொண்ட தலைவர் ஏ.கே.கோபாலன் மாநாட்டை துவக்கி வைத்தார். தமது எழுச்சிமிக்க உரையில் மாணவர் சமுதாயத்தை ஜனசங்கம் மற்றும் சீர்குலைவு சக்திகளின் தீய நடவடிக்கைகளை அம்பலப்படுத்தினார். சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் உருவான மாணவர் இயக்கம் போல எஸ்.எப்.ஐ. புத்துயிர் பெற்று பூத்துக்குலுங்க வேண்டுமென்று நெஞ்சார வாழ்த்தினார். மேற்கு வங்கத்திலிருந்து பெரும் எண்ணிக்கையில் வந்திருந்த பிரதிநிதிகள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று ‘ரெட் சல்யூட், ஏகேஜி ரெட்சல்யூட்’ என்று இடிமுழக்கம் செய்தனர். அப்போது மாநாட்டு அரங்கமே அதிர்ந்தது.
சங் பரிவாரத்தினரின் தாக்குதல்
தலைவர் ஏ.கே.ஜி. தமது உரையில் சங் பரிவார அபாயத்தை பற்றி குறிப்பிட்டதற்கு காரணம் உண்டு. எஸ்.எப்.ஐ மாநாடு நடந்த அதே வேளையில் தான் திருவனந்தபுரத்தில் சங்பரிவாரத்தின் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாநாடு நடைபெற்றது. எஸ்.எப்.ஐ மாநாட்டு நிகழ்வில் பங்கேற்க மேற்கு வங்கத்திலிருந்து 270 பிரதிநிதிகளும் மற்றும் பார்வையாளர்களும் வந்திருந்தனர். சென்னை எழும்பூர் நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் வருவதற்காக அவர்கள் காத்திருந்தனர். திருவனந்தபுரம் வருவதற்காக கூடியிருந்த சங்பரிவார கூட்டத்தினர் எஸ்எப்ஐ மாணவர்களை எழும்பூர் ரயில் நிலையத்தில் கடுமையாகத் தாக்கினர். பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விழுப்புரம் ரயில் நிலையத்திலும் சங்பரிவார கூட்டம் தாக்குதலில் ஈடுபட்டது. அன்று மாலை 5 மணியளவில் ரயில் திருச்சி வந்து சேர்ந்தது. ரயில் நின்றதும் சங்பரிவாரக் கூட்டம் கைகளில் இரும்புக் கழி, லெஜிம் சங்கிலி போன்றவற்றை ஏந்தி ‘ஓம் காளி, ஜெய் காளி’ என்று நடைமேடையில் கூச்சலிட்ட வண்ணம் அணி வகுத்தனர். அதே ரயிலில் எஸ்எப்ஐ மாநாட்டில் பங்கேற்பதற்காக தலைவர் பி.சுந்தரய்யா பயணம் செய்திருந்தார். ரயில் பெட்டியிலிருந்து அவர் இறங்கி வந்து எஸ்எப்ஐ பிரதிநிதிகளை ரயில் பெட்டிக்குள் செல்லுமாறு கட்டளையிட்டார். பெரும் கலவரம் நிகழாமல் எஸ்எப்ஐ பிரதிநிதிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டார்.
மதுரையில் வீரமுழக்க வரவேற்பு
இரவு எட்டு மணி அளவில் ரயில் மதுரை வந்து சேர்ந்தது. நடை மேடை முழுவதும் செங்கொடி ஏந்திய படை வீரர்கள் காத்திருந்தனர். “செங்கொடிக்கு ஜே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க” என்ற இடிமுழக்கம் ரயில் நிலையத்தை அதிரச் செய்தது. மேற்கு வங்க மாணவர்கள் ரயில் பெட்டிகளிலிருந்து உற்சாகத்துடன் இறங்கி வந்து செங்கொடி புதல்வர்களுடன் கைக்குலுக்கினர். நடை மேடையின் துவக்கத்திலிருந்து கடைசி வரைக்கும் செங்கொடியோடு தோழர்கள் வீரமுழக்கமிட்டு நடைபோட்டனர். இந்த பேரெழுச்சியை கண்ட சங்பரிவாரக் கூட்டம் ரயில் பெட்டிக்குள் முடங்கிவிட்டது. விருதுநகர் ரயில் நிலையத்திலும் செங்கொடிகளோடு தோழர்கள் வாழ்த்து முழக்கங்களை எழுப்பிய வண்ணம் நின்றிருந்தனர். திருவனந்தபுரம் தாகூர் கலையரங்கில் மேற்கு வங்க மாணவர் தலைவர் பிமன்பாசு கொடியேற்றி வைக்க, கேரள மாணவர் சங்கத் தலைவர் சி.பாஸ்கரன் தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தினார். மாநாட்டில் 623 பிரதிநிதிகளும், 146 பார்வையாளர்களும் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து பங்கேற்ற பிரதிநிதிகள் 21 பேர். மாநாட்டில் அறிக்கை விவாதத்தில் கே.சந்துரு (இன்றைய நீதியரசர்) பங்கேற்று பேசினார். தோழர் பிமன்பாசு எஸ்எப்ஐ தலைவராகவும், சி.பாஸ்கரன் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவராக என்.ராம் (இந்து குழுமம்) தேர்வு செய்யப்பட்டார். பிரதிநிதிகள் மாநாட்டு நிறைவாக தலைவர் பி.சுந்தரய்யா தனது போராட்ட வரலாற்று முத்திரையுடன் 2 மணி நேரம் வாழ்த்துரை வழங்கினார்.
அமெ.தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்
மனிதகுலத்தின் முதல் பெரும் எதிரி அமெரிக்க ஏகாதிபத்தியமே என்று இந்திய மாணவர் சங்கம் பிரகடனம் செய்துள்ளது. இந்த கணிப்பு எவ்வளவு உண்மையானது என்பதை இன்று உக்ரைன், காசா கோர நிகழ்வுகள் நம் கண்முன்னே சாட்சிகளாக அமைந்துள்ளன. எஸ்எப்ஐ உருவான சில மாதங்களிலேயே சென்னை நகரில் அமெரிக்க தூதரகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘அமெரிக்க ஏகாதிபத்தியமே வியட்நாமை விட்டு வெளியேறு’ என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் என்.ராம், கே. சந்துரு, ராமச்சந்திர மேனன் உள்ளிட்டோருடன் நானும் பங்கேற்றேன். ஏகாதிபத்திய சக்திகள் இன்று தூண்டி விடும் போர்வெறிகளுக்கு எதிராக மனிதகுலத்தை பாதுகாக்கும் பேரியக்கத்தில் மார்க்சிய சித்தாந்தத்தை நேசிக்கும் நாடுகள் துருவ நட்சத்திரங்களாக ஒளி வீசுகின்றன. உலகெங்கும் ஏகாதிபத்திய நாச சக்திகளுக்கு எதிராக அலைவீசி எழும் போராட்ட அலை ஜனநாயக சக்திகளுக்கு உத்வேகமூட்டி வருகின்றன. ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஜனநாயகம் மற்றும் சோசலிச கருத்துக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த பேரியக்கம் மாணவர் சமுதாயத்தின் உயர்வுக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபட்டு வருகிறது. பன்முகத்தன்மை வாய்ந்த பல்கலைக் கழகமாக திகழும் எஸ்எப்ஐ, இடதுசாரி, ஜனநாயக இயக்கத்திற்கு முத்தான பல தலைவர்களை தந்துள்ளது. பொன் விழா கண்டுள்ள இந்த பேரமைப்பு ஒளி பொங்கும் வைகறை. நமது நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு கோட்சே கூட்டத்தால் பேராபத்து ஏற்பட்டுள்ளதை கண்கூடாக கண்டு வருகிறோம். கல்விக்கூடங்களை குறிவைத்து சங்பரிவாரம் கோரத் தாண்டவமாடி வருகிறது. இத்தகைய சவால்களை சந்திக்கும் போர்க்களத்தில் எஸ்எப்ஐ தனது வீரமிக்க பங்கை வகிக்கும் என்பதில் ஐயமில்லை.