states

உ.பி., உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் லஞ்சம் இல்லாமல் எதுவும் நடக்காது!

டேராடூன், நவ. 15 - உத்தரகண்ட் உட்பட பாஜக ஆளும் மாநி லங்களில் கமிஷன் இல்லாமல் எந்த வேலை யும் நடப்பதில்லை என்று பேசி, பாஜக-வைச் சேர்ந்த உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வர் தீரத் சிங் ராவத் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. “உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியில் அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு 20 சத விகித கமிஷன் வாங்கப்பட்டு வந்தது. அதி லிருந்து பிரிந்த உத்தரகண்ட் மாநிலத்திலும் அதே 20 சதவிகிதம் கமிஷனாக வாங்கப்படு கிறது” என்று அந்த வீடியோவில் தீரத் சிங் ராவத் பேசியுள்ளார். “நான் முதலமைச்சராக இருந்தவன் என்ற நிலையில், இதையெல்லாம் வெளியே சொல்லக் கூடாது. என்றாலும், உத்தரப் பிர தேசத்தில் இருந்து நாங்கள் (உத்தரகண்ட் மாநிலம்) பிரிந்தபோது, ​​பொதுப் பணிகளைச் செய்ய 20 சதவிகிதம் வரை கமிஷன் கொடுக்கப் பட்டது என்பதை ஒப்புக்கொள்ள எனக்கு எந்தத்  தயக்கமும் இல்லை. உண்மையில், உ.பி.யிலிருந்து பிரிந்த பிறகு, அது (கமிஷன்) இங்கே  (உத்தரகண்ட்டில்) பூஜ்ஜியமாக வந்திருக்க வேண்டும். ஆனால், உ.பி. நடைமுறைதான் தொடர்ந்தது. ஆனால், நாங்கள் (உத்தரகண்ட்) 20 சதவிகிதத்துடன் தொடங்கினோம். 

எனவே, குறிப்பிட்ட சதவிகிதத்தை கமிஷனாக செலுத்தாமல் ஒருவர் இங்கு (உத்தரகண்ட்) எதையும் செய்ய முடியாது என்று பவுரியைச் சேர்ந்த பாஜக எம்.பி.  ஒருவரே என்னிடம் கூறினார். உத்தரப்பிரதேச த்தில் கமிஷன் நடைமுறையில் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, உத்தரகண்டிலும் அது தொடர்கிறது என்றார். எனினும், இந்த லஞ்ச ஊழலுக்கு, குறிப்பாக யாரும் பொறுப்பேற்க முடியாது. இது ஒரு மனநிலை. நமது மாநி லத்தை நமது சொந்த குடும்பமாக நாம் பார்க்கத் தொடங்கும் போதுதான் அது போகும்” இவ்வாறு தீரத் சிங் ராவத் பேசியுள்ளார்.  இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல் இல்லை என்ற போதும் பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு ஒப்பந்த வேலைகளுக்கு கமிஷன் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை என்று, பாஜக-வைச் சேர்ந்த தலைவர் ஒருவரே- அதிலும் மாநில முதல்வராக இருந்த ஒருவரே கூறியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழலற்ற நிர்வாகம் என்று பிரதமர் மோடி ஜம்பம் அடித்து வரும் நிலையில், இதுதான் அதன்  லட்சணமா? என்ற கேள்விகளையும் எழுப்பி யுள்ளது. 

ஏற்கெனவே, கர்நாடகா மாநிலத்தில் அரசு ஒப்பந்தங்களுக்கு 40 சதவிகிதம் கமிஷன் கேட்டு தொல்லை கொடுப்பதாக ஒப்பந்த தாரர்கள் தற்கொலை செய்து கொள்வதும்,  குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோ ருக்கு நேரடியாகவே புகார் கடிதம் அனுப்பு வதும் நடந்து வரும் நிலையில், தற்போது உத்தரகண்ட் விவகாரமும் பாஜக ஆட்சியின் அலங்கோலத்தை படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.  உத்தரகண்ட்டில் 2017-இல் முதல்வராக வந்த திரிவேந்திர சிங் ராவத் நான்கு ஆண்டு கள் பதவியில் இருந்தார். அவரைத் தொடர்ந்து  தீரத் சிங் ராவத் முதல்வராக பதவியேற்றார். ஆனால், வெறும் 116 நாட்களிலேயே இவரது பதவியைப் பறித்த பாஜக, புஷ்கர் சிங் தாமியை முதல்வராக்கியது குறிப்பிடத்தக்கது.