states

img

விவசாயிகள் நாடு தழுவிய போராட்டம்

புதுதில்லி, ஜுலை 5- குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவதாக அளித்த வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து, நாடு தழுவிய ‘மோசடிக்கு எதிரான போராட்டம்’ நடத்த விவசாயிகள் கூட்டமைப்பு (கிசான் மோர்ச்சா) முடிவு செய்துள்ளது. கார்ப்பரேட் ஆதரவு விவசாயச் சட்டங்களை மோடி அரசு திரும்பப் பெறும் கட்டாயத்தை புகழ்பெற்ற விவசாயிகளின் போராட்டம் ஏற்படுத்தியது. குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமாக்கப்படும் என்று ஒன்றிய அரசு உறுதி அளித்தது. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது. 7 மாதங்களாகியும் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத சூழ்நிலையில் நாடு தழுவிய போராட்டம் நடத்த காஜியாபாத்தில் நடைபெற்ற கிசான்மோர்ச்சா கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஜூலை 31, சாலை மறியல் நாடாளுமன்றத்தின் ஆண்டு கூட்டத்தொடர் தொடங்கும் ஜூலை 18 முதல் 31 வரை மாவட்ட அளவில் போராட்டத் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்தப்படும். உத்தம்சிங் தியாகி தினமான ஜூலை 31ஆம் தேதி நாடு முழுவதும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேசிய நெடுஞ்சாலைகள் மறியல் நடைபெறும். விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறாதது மற்றும் மின்சார மசோதாவை மீண்டும் கொண்டு வரும் நடவடிக்கையை கண்டித்தும் கிசான்மோர்ச்சா சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

ஜெய் ஜவான் ஜெய்கிஷான் மாநாடுகள்

ராணுவ சேவையையும் ஒப்பந்த முறைக்கு மாற்றும் அக்னிபாதை திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடையும். இதன் ஒரு பகுதியாக இளைஞர்கள், முன்னாள் ராணுவத்தினர் அணிதிரட்டப்படுவர். ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஜெய்ஜவான் மற்றும் ஜெய்கிசான் மாநாடுகள் நடத்தப்படும். லக்கிம்பூர்கேரியில் 3 நாள் தர்ணா உ.பி.யின் லக்கிம்பூர்கேரியில் விவசாயிகளை கொன்ற குற்றவாளியின் தந்தை அஜய் மிஸ்ரா தெனி இன்னும் ஒன்றிய அமைச்சரவையில் நீடிப்பதற்கு கிசான் மோர்ச்சா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 18 முதல் 20 வரை லக்கிம்பூர்கேரியில் மாபெரும் தர்ணா நடத்தப்படும். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிசான்மோர்ச்சா தலைவர்கள் தர்ணாவில் பங்கேற்கின்றனர். விவசாயிகளுக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும் எதிரான வன்முறை மற்றும் ஒடுக்குமுறையை கிசான் மோர்ச்சா கண்டித்தது. டீஸ்டா செதல்வாத், ஸ்ரீகுமார் மற்றும் முஹம்மது சுபைர் ஆகியோரின் கைதுகள் ஜனநாயக உரிமைகளை மேலும் நசுக்குவதற்கு எடுத்துக்காட்டு என்றும், கைது செய்யப்பட்டவர்களுடன் துணை நிற்பதாகவும் கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.