நாகப்பட்டினம்,ஆக.25- தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப் பட்ட, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 25 வெள்ளியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக்குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி அறி வித்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் மதுரை யில் இந்த திட்டத்தை முதல்வர் துவக்கிவைத் தார். தற்போது தமிழகம் முழுவதும் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 31 ஆயிரம் அரசுப்பள்ளிகளில் படிக்கும் 17 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில்,அவர்களின் கற்றல் திறன் மேம்பட இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் துவங்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளி யில் இந்த திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர், மாணவ, மாணவியர்களுக்கு உணவைப் பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தி உரையாடினார்.
எனது வாழ்வில் பொன்னாள்
பின்னர் இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்நாள் எனது வாழ்வில் ஒரு பொன்னாள் என்பது போல சிறப் பாக அமைந்துள்ளது. பெருமைக்குரிய கலை ஞர் படித்த பள்ளியில் இத்திட்டத்தை விரிவாக் கம் செய்ததில் பெருமை கொள்கிறேன். கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளன்று மதுரை ஆதிமூலம் மாநக ராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தேன். இப்போது அதை அனைத்துப் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்துள்ளோம். பல்வேறு திட்டங்களை செய்திருந்தாலும் காலை உணவு திட்டம் எனக்கு மன நிறைவை தருகிறது. 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பயில்கிற சுமார் 17 லட்சம் மாணவர்கள் இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள். இந்த திட்டத்துக்கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது என சொல்வதைக் காட்டிலும் இதனை நிதி முதலீடு என நான் சொல்வேன். இந்த முத லீடு நிச்சயம் நாட்டுக்கு நலன் சேர்க்கும். இந்தியா விலேயே முன்னோடி திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்துவதில் நம்பர் 1 மாநிலம் நம் தமிழகம் தான். உயரிய நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் நம் மாநிலத்துக்கு நலன் சேர்க்கும். ஏழை வீட்டு பிள்ளைகள், ஒடுக்கப்பட்ட குடும்பத்தின் பிள்ளைகள் கல்வி பெற வறுமை யும் சாதியும் தடையாக இருக்கக் கூடாது என்று நினைத்த பெரியார், அண்ணா, கலைஞர் வழித் தடத்தில் என்னுடைய திட்டங்கள் இருக்கும்.
பறிக்க முடியாத சொத்து
படிப்பில் மட்டுமே மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.யாரும் பறிக்க முடியாத சொத்து கல்வி மட்டும் தான். அதனால் சொல் கிறேன், படிங்க, படிங்க, படிங்க. இதை மட்டுமே மாணவர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். நிலவுக்கு சென்று ஆய்வு மேற்கொள்கிற விண்கலனை அனுப்பி சாதனை படைத்துள்ள தமிழக விஞ்ஞானிகள் போல இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிற வகையில் உலகமே கவ னிக்கும் சாதனையாளராக நீங்கள் உருவாக வேண்டும். அதனை உங்கள் பெற்றோருடன் சேர்ந்து நானும் பார்க்க வேண்டும். அதை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மீன் வளர்ச்சி கழக தலை வர் என். கௌதமன், நாகப்பட்டினம் நாடாளு மன்ற உறுப்பினர் எம். செல்வராஜ், தாட்கோ தலைவர் உ. மதிவாணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்டங்களில் அமைச் சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் துவக்கிவைத்தனர். (ந.நி.)