புதுதில்லி, மே 24- புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் திறந்து வைக்க ஒன்றிய மோடி அரசு அனுமதி வழங்காததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட போது, ஜனாதிபதியை (ராம்நாத் கோவிந்த்) மோடி புறக்கணித்தார். இப்போதும் பதவியேற்பு விழாவில் ஜனாதிபதியை (திரௌபதி முர்மு) புறக்கணித்துள்ளார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியக் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் கூட்டினால்தான் நாடாளுமன்ற அவையே கூடும். குடியரசுத் தலைவர், ஆண்டுதோறும், கூட்டு அமர்வில் உரையாற்றுவதன் மூலம் நாடாளுமன்ற செயல்பாட்டைத் தொடங்குகிறார். ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றம் மேற்கொள்ளும் முதல் பணி ஜனாதிபதியின் உரைக்கு “நன்றி தெரிவிக்கும் தீர்மானம்” ஆகும்” என பதிவிட்டுள்ளார்.
கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகாவில் உள்ள குல்பர்காவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பாஜக பட்டியலின, பழங்குடியின வகுப்பினரை பெயரளவுக்கு மட்டுமே மதிக்கிறது. அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக ஓரிருவருக்கு பொறுப்புகளை வழங்குகிறது. ஆனால் மதிக்க வேண்டிய இடத்தில் அவர்களை அவமதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை. அவரை அழைக்காதது ஏன் என பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும். கட்டப்பட்டுள்ள இந்த நாடாளுமன்றத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தையும் பாஜக அழைக்கவில்லை. இதன்மூலம் பட்டியலின, பழங்குடியின வகுப்பினரை பாஜக புறக்கணித்துள்ளது” என கூறியுள்ளார்.