பாஜகவின் தலைமை நிலையப் பேச்சாளர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறிப் பேசுவார். ஆனால் வார்த்தை ஜாலங்கள் மூலம் பம்மி பதுங்கிக் கொள்வார். அப்படித்தான் அவர் ராமர் கோயில் பிரச்சனையை எழுப்புகிறார். குழந்தை ராமரைப் பிரதிஷ்டை செய்கிற விழாவுக்கு ராகுல் காந்தி வரவில்லை, அகிலேஷ் யாதவ் வரவில்லை என்று கூறி ராமரையும் ராமர் கோவிலையும் மறைமுகமாக அரசியல் களத்தில் இறக்கி விடுகிறார். நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்று அவர் நாட்டைச் சுற்றி வருகிறார். ஆனால் அவரது பேச்சை நம்ப முடியாது என்ற முடிவுக்கு மக்கள் வந்துள்ளனர் என்பதை சிஎஸ்டிஎஸ் - லோக் நிதி நடத்திய கருத்துக்கணிப்பு அம்பலப்படுத்தியுள்ளது. மார்ச் 28 முதல் ஏப்ரல் 8 வரை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உட்பட 19 மாநிலங்களில் இந்தக் கருத்துக் கேட்பை நடத்தியுள்ள னர். இவற்றில் 100 மக்களவைத் தொகுதிகளின் 400 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் நடத்தப்பட்ட தேர்தல் கருத்துக்கணிப்பு இது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவர்கள் முன் வைத்துள்ள பிரச்சனை வேலைவாய்ப்பு. 2014ல் ஆட்சிக்கு வரும்போது ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை என்று வடைசுட்டார் பிரதமர். ஆனால் ஒன்றும் வேலைக்காகவில்லை. சின்னச் சின்ன வேலைகளுக்குக் கூட பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள், தொழில் கல்வி பயின்றவர்கள் விண்ணப்பம் செய்வதும் ஏமாறுவதும் தொடர்கதையாகிறது.
அற்ப சொற்ப ஊதியத்தில் குடும்பம் நடத்துவோரையும் கீழ் நடுத்தர வர்க்கத்தினரையும் நடுத்தர வர்க்கத்தினரையும் போட்டு முடக்குகிற அடுத்த பிரச்சனை விலைவாசி உயர்வு. விலைவாசி உயர்வால் வாழ்க்கைச் சுமை விழிபிதுங்க வைக்கிறது என்று ஏழை, எளிய மக்கள் பொருமுகின்றனர். 10 ஆண்டுகளாக வளர்ச்சி வளர்ச்சி என்று பிரதமர் தம்பட்டம் அடித்து வருகிறார். இதுபற்றியும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பிரதமரின் முகத்தில் அறைந்தாற்போல், இந்த வளர்ச்சியால் பயனடைந்தவர்கள் பணக்கார்கள்தான் என ‘பளிச்’பதில் அவர்களிடமிருந்து வந்துள்ளது. கிராம விவசாயிகளும் தங்களின் வாழ்க்கை மேலும் மேலும் சுமையாகி அழுத்தப்படுவதுதான் எதார்த்தம் என்று கூறியுள்ளனர். இந்தக் கருத்துக்களையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் பெரும்பாலான மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறதென்றால், ராமர்கோயில் இருக்கட்டும் - வளர்ச்சிப் பீற்றல் இருக்கட்டும். எங்களுக்கு வேலை எங்கே என்று இளைஞர்கள் கேட்கிறார்கள்; விலைவாசி உயர்விலிருந்து நாங்கள் மீட்கப்படவில்லையே என்று ஏழை, எளிய, நடுத்தர, கீழ் நடுத்தரப் பகுதி மக்கள் குமுறுகின்றனர். விவசாயிகளும் வேதனையின் விளிம்பில் நிற்கிறார்கள். பொய் நெல்லைக் குத்தியே பொங்க நினைக்கும் பாஜகவின் கைநெல்லும் பறிபோகப் போகிறது என்பதையே மக்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் உணர்த்துகின்றன.
(புள்ளிவிபர ஆதாரம் - தி இந்து - ஏப்ரல் 14, 2024)
- மயிலை பாலு