கொச்சி, ஆக.6- பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அஸ்ஃபாக் ஆலம். ஆலுவாவில் கூலித் தொழில் செய்துவந்த இவர் குடியிருந்த வீட்டின் அருகில் பீகாரைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது 5 வயது பெண் குழந்தையுடன் வசித்தனர். கடந்த ஜூலை 28 அன்று மாலை சிறுமியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமியை ஒரு வாலிபர் அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அஸ்ஃபாக் ஆலம் கைது செய்யப்பட்டார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று கழிவுநீர் கால்வாயில் போட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது கேரளத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சிறுமி படித்துவந்த பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் ஏராளமான பொதுமக்களும் அவரது இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிறுமியின் குடும்பத்திற்கு உடனடி நிவாரணமாக ரூ .ஒரு லட்சத்தை சமூக நீதித்துறை மூலம் அமைச்சர் வீணா ஜார்ஜ் வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட அஸ்ஃபாக் ஆலம் குற்றப் பின்னணி கொண்டவர் என்று போலீஸார் கூறுகின்றனர். அவர் கடுமையான குற்றவாளி என்றும், போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்றும் போலீசார் தெரிவித்தனர். அவர் தில்லி சிறையில் இருந்ததாக வும் தகவல் வெளியானது. அஸ்ஃபாக் ஆலம் 2018 ஆம் ஆண்டு தில்லி காஜியாபாத்திலும் சிறை தண்டனை அனுபவித்தார். இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.