பாஜகவுக்கு ‘நன்கொடை’களை வாரிவழங்கி தனக்கு சாதகமாக “வேதாந்தா” நிறுவனர் அனில் அகர்வால் விதிகளை மாற்றி மாபெரும் ஊழல் செய்துள்ளார் என ஓசிசிபிஆர் அடுத்த அறிக்கையை வெளியிட்டு மோடி அரசை ஆட்டம் காண வைத்துள்ளது. பெரும் பணக்காரர்களும், பெரும் தொழில் நிறுவனங்களும் ஊழல், சட்டவிரோத பணபரிமாற்றம், கறுப்பு பண பதுக்கல், சட்டவிரோத பரிவர்த்தனை மற்றும் பங்குச்சந்தை முறைகேடு ஆகியவற்றில் ஈடுபடுவதை துப்பறிந்து, ஆதாரங்களுடன் ஆய்வு கட்டுரைகளை வெளியிடும் அமெரிக்காவை சேர்ந்த ஓசிசிஆர்பி (OCCRP) நிறுவனம் வியாழனன்று மோடியின் நெருங்கிய நண்பரும், இந்தியாவின் முன்னணி பணக்காரருமான கவுதம் அதானியின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி உரிமையாளர்களின் விபரத்தோடு அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. ஓசிசிஆர்பி அறிக்கையால் அதானியின் பங்குகள் கடும் சரிவை கண்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வெள்ளியன்று பாஜகவின் மற்றொரு மெகா கூட்டாளியான “வேதாந்தா” குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் முறைகேடுகளை ஓசிசிபிஆர் நிறுவனம் போட்டுடைத்துள்ளது.
அரசுக்கே ‘உத்தரவு’ போட்ட அகர்வால்
கொரோனா வைரஸ் 2020 - 2021-இல் நாட்டின் சுகாதார அமைப்பை முடக்கி, பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைத்தது. இந்த நெருக்கடியை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட எரிசக்தி மற்றும் சுரங்க மெகா கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட் தலைவர் அனில் அகர்வால், 2021 ஜனவரி மாதம் அப்போதைய ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில், சுரங்க நிறுவனங்கள் புதிய சுற்றுச்சூழல் அனுமதி களைப் பெறாமல் உற்பத்தியை 50 சதவிகிதம் வரை அதிகரிக்க அனுமதிப்பதன் மூலம் இந்தியாவின் விரைவான பொருளாதார மீட்சிக்கு உத்வேகம் ஏற்படும் என்றும், உடனடியாக உற்பத்தி தொடங்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றும், இந்த செயல்முறையின் மூலம் அரசாங்கத்திற்கு பெரும் வருவாய், வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக, ஒரு சாதாரண நிர்வாக அறிவிப்பின் மூலம் இந்த மாற்றத்தை மேற்கொள்ளலாம் என ஒன்றிய அரசிற்கு அனில் அகர்வால் ‘அறிவுரை ’ கூறியுள்ளார்.
மோடிக்கும் கடிதம்
இது தொடர்பாக ஜூன் மாதம் வேதாந்தாவின் தலைமை நிர்வாகி சுனில் துக்கல், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடியாக கடிதம் எழுதினார். சுற்றுச்சூழல் அனுமதி களை வழங்கும் தற்போதைய முறையை ரத்து செய்வதன் மூலம் பொருளாதார இயந்திரத்தை உடனடியாக முடுக்கி விட முடியும் என கடிதத்தில் வாதிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பணியில் இருந்த சுற்றுச்சூழல் செயலாளருக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் அப்போதைய காலகட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தின் யோசனை பிரதமர் அலுவலகத்திற்குள் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது எனவும் ஓசிசிஆர்பி அறிக்கை கூறுகிறது. எனினும், கடிதம் கிடைத்த 2 வாரத்திற்குள், கடிதம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தை கேட்க நடவடிக்கை எடுக்காமல், அகர்வாலின் உத்தரவுக்கு அடிபணிந்தது போல அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளரையும், வனத்துறையின் இயக்குநரையும் அழைத்து கொள்கைப் பிரச்சனையைப் பற்றி விவாதிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து 2022ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடைபெற்ற ரகசியக் கூட்டங்களின் முடிவில், சுரங்க நிறுவனங்கள் பொது விசாரணைகளை நடத்தாமல் உற்பத்தியை 50 சதவீதம் வரை அதிகரிக்க அனுமதிக்கும் விதமாக, விதிமுறைகளை தளர்த்தி ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டது.
அதிகாரிகள் எதிர்ப்பு
சுற்றுச்சூழல் விதிகளைத் தளர்த்துவதற்கு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். விதிகளை தளர்த்தினால் இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுப்பாடின்றி கொள்ளையடித்துவிடும் என துறைசார்ந்த அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆனால் அதிகாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மோடி அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக சுற்றுச்சூழல் விதிகளை தளர்த்தியுள்ளது.
சுரங்கம் மட்டுமல்ல... எண்ணெய்யும்!
வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ர்ன் ஆயில் & கேஸ் நிறுவனம் எண்ணெய் ஆய்வுத் திட்டங்களுக்கான பொது விசாரணைகளை ரத்து செய்யும் வேலைகளில் இறங்கியது. சுரங்கத்தைப் போலவே ஒன்றிய அரசாங்கத்தின் பொது ஆலோசனை இல்லாமல் அமைதியாக சட்டத்தை தனக்கு சாதகமாக திருத்திக்கொண்டது. இதன் பலனாக ராஜஸ்தானின் வடக்குப் பாலைவனங்களில் கெய்ர்னின் குறைந்தது ஆறு எண்ணெய் திட்டங்களின் வளர்ச்சிக்கு ‘கிரீன் சிக்னல்’ கிடைத்தது. உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆறு எண்ணெய் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
தற்போது அங்கு கெய்ர்ன் நிறுவனத்தின் எண்ணெய் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டமிடப்பட்ட 29 கிணறுகளில், மூன்றில் ஒரு பங்கு கிணறுகளில் எண்ணெய் அல்லது எரிவாயுவைத் தேடி இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது என ஓசிசிஆர்பி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பாஜகவிற்கு ரூ.50 கோடி நன்கொடை
வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் இரண்டு செயல்முறைகள் மூலம் ஒன்றிய அரசிடம் இருந்து பல்வேறு சலுகைகளை பெற்றுள்ளார். ஒன்று மோடியை வானளாவப் புகழ்வது. டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவது, நான் மோடியின் ரசிகர் என்றும், உலகில் உள்ள அனைத்து ஜனநாயக நாடுகளில் வலிமையான, அச்சமற்ற தலைவர் மோடி என்று புகழ்ந்தே தனது காரியத்தை அனில் அகர்வால் சாதித்துள்ளார். மற்றொன்று, பாஜகவுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை என்ற பெயரில் லஞ்சம். அதானியைப் போலவே அனில் அகர்வால் பாஜகவின் முக்கிய ஆதரவாளராகவும் உள்ள நிலையில், ஓசிசிஆர்பி-யின் அறிக்கையின்படி வேதாந்தா அறக்கட்டளை மூலம் பாஜக 4 வருடத்தில் (2016-2020) ரூ.50 கோடி (6.16 மில்லியன் டாலர்) அளவில் நன்கொடை பெற்றுள்ளது. இதன் பலனாக கடந்த ஆண்டு மட்டும் வேதாந்தா நிறுவனம் ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
பாஜக கணக்கு இல்லாமல் வாங்கிய வரலாறும் உண்டு
வேதாந்தா அறக்கட்டளைகளில் ஒன்றான பத்ரம் ஜன்ஹித் ஷாலிகா, 2 முறை, அதாவது 2016-2017 மற்றும் 2021-22 நிதியாண்டுகளில் பாஜகவிற்கு நன்கொடை அளித்துள்ளது. பாஜகவுக்கு நன்கொடை அளிப்பவர்களின் முதல் பத்து இடங்களுக்குள் பத்ரம் ஜன்ஹித் ஷாலிகா இடம்பிடித்துள்ளது. என இந்திய வழக்கறிஞர் குழுவான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தரவுகள் தெரிவித்ததை ஓசிசிஆர்பி சுட்டிக்காட்டியுள்ளது. இதுதவிர தேர்தல் பத்திரங்கள் மூலமும் பாஜகவிற்கு வேதாந்தா குழுமம் நன்கொடை அளித்துள்ளது. அதன் உண்மையான நிலவரம் தெரியவில்லை என்றாலும், கணிசமான தொகையை வேதாந்தா வழங்கியுள்ளதாக தெரிகிறது.
நொறுங்கும் மோடியின் வாய்ஜாலம்
உலகளாவிய மேடையில் 2030 ஆண்டிற்குள் இந்தியாவின் கார்பன் உமிழ்வை 100 கோடி டன்கள் குறைப்பதாகவும், அதன் பிறகு 40 ஆண்டுகளுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதாகவும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். ஆனால் அதற்கு மாறாக இந்திய அரசாங்கம் எண்ணெய் மற்றும் சுரங்க நிறுவனங்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது என ஓசிசிஆர்பி அறிக்கை போட்டுடைத்துள்ளது.
தொகுப்பு : எம். சதீஸ்குமார்