புதுதில்லி, மே 29- ஆதார் அட்டையின் நகலை யாரிடமும் வழங்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் அடையாள அட்டை என்பது 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், ஆதார் அட்டையின் நகலை யாரிடமும் வழங்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளிட்டுள்ள அறிவிப்பில், ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் ஆதார் அட்டையின் புகைப்பட நகலை யாரிடமும் வழங்க வேண்டாம். ஆதார் நகலைப் பெறும் நிறுவனங்கள் அதை தவறாகப் பயன்படுத்தக்கூடும். மாஸ்க்டு (Masked) எனப்படும் கடைசி நான்கு இலக்கங்கள் கொண்ட ஆதார் அட்டையைப் பயன்படுத்தவும். பிரவுசிங் சென்டர்கள், பொதுக் கணினியில் இ-ஆதாரை டவுன்லோட் செய்வதைத் தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் ஆதார் விவரங்கள் தரவிறக்கம் செய்தால் அதை அங்கிருந்து டெலிட் செய்துவிட வேண்டும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆதார் ஆணையத்தின் பெங்களூரு பிராந்திய அலுவலகம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும், இந்த சுற்றறிக்கையின் மூலம் தவறான புரிதலுக்கும், தவறாக விளக்கம் அளிக்கப்படவும் வாய்ப்பு உள்ள தால் உடனடியாக திரும்பப் பெறுவதாகவும் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் வழக்கம்போல் (சாதாரண எச்சரிக்கையுடன்) பயன்படுத்தலாம் எனவும் கூறியுள்ளது.