states

img

இந்தித் திணிப்பு பகையையும் பதற்றத்தையுமே ஏற்படுத்தும்..!

கோஹிமா, ஏப். 15 - இந்தியாவில், பல்வேறு மாநிலங் களைச் சேர்ந்தவர்கள், தங்களுக் குள்ளான உரையாடலை இந்தி மொழியிலேயே மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி  நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்மொழிக் குழு கூட்டத்தில் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரும், அலுவல்மொழிக் குழுத் தலைருமான அமித்ஷா பேசியிருந்தார். குறிப்பாக, பத்தாம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதற்கு அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் ஒப்புக் கொண்டு விட்டதாகவும், அவர் குறிப்பிட்டிருந்தார். அமித்ஷாவின் இந்தப் பேச்சு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகளும், “அமித்ஷாவின் பேச்சு ஆபத்தானது; நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது” என்று கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், “பத்தாம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் ஒன்றிய பாஜக அரசின் முடிவு, நாட்டில் பகையையும், பதற்றதையும் ஏற்படுத்தும்” என்று வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 8 மாணவர் சங்கங்களும் எச்சரிக்கை செய்துள்ளன. இதுதொடர்பாக, அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளன. அந்தக் கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது: “இந்தியாவில் இந்தி மொழியைப் பேசுபவா்கள் 40 முதல் 43 சதவிகிதம் போ் இருக்கின்றனர் என்பது முக்கியமான விஷயம். அதேசமயம், தனித்துவமான, பாரம்பரியம் மிக்க, வளமான உள்ளூா் மொழியைப் பேசும் மக்களும் இருக்கிறார்கள்.

பல மொழிகளைப் பேசுவதுதான் இந்தியாவின் பன்முகத் தன்மைகளில் ஒன்றாக உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இந்தோ - ஆரியன் தொடங்கி திபெத்தோ - பா்மன், ஆஸ்ட்ரோ - ஆசிய குடும்பங்கள் வரை வெவ்வேறு இனக் குழுக்கள் தனித்துவமான தங்கள் மொழியைப் பேசி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிப் பாடத்தில் இந்தியை கட்டாயமாக்குவது, உள்ளூா் மொழிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமன்றி மாணவா்களின் பாடச் சுமையும் அதிகரிக்கும். இந்தியைக் கட்டாயமாக்குவது, ஒற்றுமையை உருவாக்குவதற்குப் பதிலாக, மாநிலங்களில் பகைமையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும். எனவே, பத்தாம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்கும் முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். அதற்குப் பதிலாக, 10-ஆம் வகுப்பு வரை அந்தந்த மாநில மொழியைக் கட்டாயமாக்க வேண்டும். இந்தி விருப்பப் பாடமாக இருக்கலாம்.” இவ்வாறு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர் சங்கங்கள் கூறியுள்ளன.