“நாட்டின் சொத்துக்களின் எஜமானர்கள் மக்களேயாவர். ஆனால் சொத்துக்களைக் காக்க வேண்டிய மேலாளரான மோடியோ, நாட்டின் சொத்துக்களை சூறையாடிக் கொண்டிருக்கிறார். அவரை மாற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
திரிபுராவின் தலைநகர் அகர்தலாவில் மாபெரும் பேரணி/பொதுக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்திருந்தது. இக்கூட்டத்தை நடத்தவிடாத தடுத்திட, அங்கே ஆட்சிசெய்துவரும் பாஜக பல்வேறு விதங்களிலும் நடவடிக்கை எடுத்தது. அனைத்தையும் தகர்த்தெறிந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றார்கள்.
கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்துகையில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
“பாஜக, பல்வேறு தடைகளை விதித்திருந்தபோதிலும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து மாபெரும் அளவில் இங்கே பங்கேற்றுள்ள மக்கள் பாஜக அரசாங்கத்திற்கு இதன்மூலம் ஒரு செய்தியை அளித்திருக்கிறார்கள். “உங்களால் மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லை என்றால், ஆட்சிக்கட்டிலிலிருந்து இறங்கிக் கொள்ளுங்கள்” என்பதே அந்த செய்தியாகும். மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய ஒரே அணி இடது முன்னணி மட்டுமேயாகும்.
மோடியின் எட்டரை ஆண்டு கால ஆட்சியில் அவருடைய கூட்டுக்களவாணி முதலாளிகள் நாட்டின் பொதுத்துறை வங்கிகளிலிருந்து வாங்கிய 11.5 லட்சம் கோடி ரூபாய் கடன்களை, மோடி தள்ளுபடி செய்திருக்கிறார். கடந்த 19 நாட்களில் மட்டும் நாட்டின் மக்கள் தொகையில் 4 கோடி பேர் வேலை இழந்துள்ளார்கள். நாட்டின் சொத்துக்களின் எஜமானர்கள் மக்களேயாவர். ஆனால் இதனை நிர்வகிக்கவேண்டிய மேலாளரான மோடியோ, அவற்றை சூறையாடிக் கொண்டிருக்கிறார். இதனை அனுமதிக்க முடியாது. அவரை மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது.”
இவ்வாறு சீத்தாராம் செய்சூரி கூறினார்.
மாணிக் சர்க்கார்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார் பேசுகையில், மக்கள் தீர்மானித்துவிட்டால், முடியாது என்பது எதுவும் இல்லை என்பதற்கு இங்கு திரண்டிருக்கிற மக்கள் கூட்டமே சாட்சியாகும் என்றார். இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் முன்வர வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
ஜிதேந்திர சௌத்ரி
கட்சியின் திரிபுரா மாநில செயலாளர் ஜிதேந்திர சௌத்ரி பேசுகையில், பழங்குடியினர் உரிமைகளை பாஜகவிடம் யாசகம் கேட்டு பெற்றுவிட முடியாது. அவற்றை வெகுஜனப் போராட்டங்கள் மூலமாகவே பறித்தெடுத்திட முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணியும், கணமுக்தி பரிசத்தும் மக்களின் மகத்தான் ஆதரவுடன் அவற்றைப் பறித்தெடுத்திடும் என்றார்.
(ந.நி.)