எதையும் எதற்கு ஏனென்று கேட்பாய்
எண்ணத்தில் பகுத்தறிந்து நல்லதையே ஏற்பாய்!
கதையாய் பிறர்சொல்லும் கற்பனையை ஆய்வாய்
காலத்திற் கேற்றார்போல் கருத்ததிலேச் சேர்ப்பாய்!!
மூடப் பழக்கத்தை முளையிலேயேக் கிள்ளிடு
மூர்க்கத் தனமான சிந்தனையைத் தள்ளிடு!
கேடுமிகு கொள்கையை ஆய்ந்தறிந்து சொல்லிடு
கெட்ட குணத்தோர்தம் கீழ்மைதனை எள்ளிடு!
ஆறாம் அறிவினையே ஆக்கத்திற் காக்கிடு
அதுதான் பகுத்தறிவு அதைநீயும் அள்ளிடு!
மாறா ததெதுவும் இல்லையெனச் சொல்லிடு
மாற்றந் தானியற்கை என்பதையேப் புரிந்திடு!
புதிய சிந்தனையால் புதுமைகளைப் படைத்திடு
போற்றிடும் பழமைமிகு கருத்ததனை அடைத்திடு!
அதிசய அறிவியலின் ஆற்றலதைப் போற்றிடு
அறிவிலா சிந்தனையின் ஆணிவேரை அகற்றிடு!
இல்லா ஒன்றின்மேல் பற்றுதலை அகற்றிடு
இருப்பது உண்மையெனில் அதைநீயும் போற்றிடு!
பொல்லாப் பேர்வழிகள் போற்றுகின்ற செயல்தடு
புறங்காண் அவர்கொள்கைத் தடுக்கும் செயல்கொடு!