அரசு - தனியார் கூட்டுறவு அடிப்படையில் உருவாகும் ஒப்பந்தங்கள் பலவீனமானதாக இருந்தால் பொது சொத்துக்கள் தனியார் கைக்கு மடைமாற்றம் செய்யப்படும். மேலும் மக்களுக்கு குறைவான கட்டணத்தில் அல்லது இலவசமாக மருத்துவ சேவை வழங்கும் பொறுப்பையும் கை கழுவி விடும். சில நாட்களுக்கு முன் இந்தியாவின் சுகாதார அமைப்பை மறு வடிவமைப்பதற்கான லேண்செட் குடிமக்கள் ஆணையத்திலிருந்து சுகாதார அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சுஜாதா ராவ் பதவி விலகினார். 2020 ஆம் ஆண்டில் நிதி ஆயோக் முன்மொழிவின் அடிப்படையில் இந்தியாவில் சுகாதார சேவைகளை தனியார் மயமாக்கும் முயற்சியை மோடி அரசு தீவிரப்படுத்தியது. நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் அரசு - தனியார் கூட்டு முறையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் மாவட்ட மருத்துவமனைகள் இணைக்கப்படும் என்றும் அறிவித்தார் . பிபிபி(PPP) முறையில் தனியார் கல்லூரிகளை அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்ட ஒரு வருடத்திற்கு பிறகு இது நடந்துள்ளது. சுஜாதா ராவ் நாட்டில் மருத்துவ சேவையை தனியார்மயமாக்குவதன் மூலம் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து தனது ஆழமான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்:
அரசு பொது வசதிகளை தனியார் பயன்படுத்தவே உதவும் கேள்வி: மத்தியப் பிரதேச மாநில அரசு 10 மாவட்ட மருத்துவமனைகளை தனியார்மயமாக்குவதற்கான அறிவிப்பை ஜூலை 2024 வெளியிட்டது. அதில் 25 சதவீத படுக்கைகள் கட்டணம் செலுத்தும் அடிப்படையில் நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிபிபி(PPP) முறையில் இந்த முயற்சி மக்களுக்கு சுகாதார வசதிகளை இலவசமாக அளிக்குமா? அதே வேளையில் சுகாதார உள்கட்டமைப்புகளை மேம்படுத்த உதவுமா? பதில்: அந்த மாநிலத்தைப் பொறுத்தவரை பொது வசதிகளை தனியாரிடம் ஒப்படைப்பது இது நான்காவது முறையாகும். ஒவ்வொரு மருத்துவமனையும் ரூபாய் 760 கோடிக்கு முன்பணம் பெற்று 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட உத்தேசிக்கப்பட்டுள்ளது. மொத்த மதிப்பீட்டில் 60 சதவீத கடன், நிலம் மற்றும் பிற அடிப்படை வசதிகளையும் வழங்கி 100 சதவீத செயல்பாட்டுச் செலவை அவர்கள் திரும்பப் பெறும் வழி செய்யும் 2019 ஆம் ஆண்டின் ஒன்றிய அரசின் நிதி திட்டத்தின் கீழ் இவை இயக்கப்படுகின்றன. 75சதவீத படுக்கைகள் இலவச சிகிச்சை பெறுவோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனை மட்டும் தான். நன்கொடை அல்லது மானியத் தொகை அதிகமாக வசூலிக்காமல் தனியார் மருத்துவக் கல்லூரிகள் துவங்கப் போவதில்லை. ஒருவேளை துவங்கினாலும் இது நடக்கப் போவதில்லை .10சதவீத இலவச படுக்கைகள், 50சதவீத இலவச வெளி நோயாளிகள் என்னும் நிபந்தனையின் பேரில் நிலம் மற்றும் சுங்கவரிச் சலுகைகள் (விலக்கு ) அளிக்கும் பழைய திட்டமாக இது மாறிவிடும். ஆந்திராவின் சித்தூர் மாடல்: இரு நிர்வாகத்தின் குழப்பம் இலவசம் கைகழுவல்
கேள்வி: தனியார் மருத்துவக் கல்லூரிகள் உடன் மாவட்ட மருத்துவமனைகள் இணைக்கப்படும் பொழுது எழுகின்ற சவால்கள் என்ன? பதில்: ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் போன்ற இடங்களில் 300 படுக்கைகள் கொண்ட மாவட்ட மருத்துவமனையுடன் இணைத்து தனியார் மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டது. இது முறையாகச் செயல்படவில்லை. தனக்கென சொந்தமாக ஊழியர்களை கொண்டுள்ளனர். மற்றும் மருத்துவமனைகளை தங்களின் சொந்த தேவைகளுக்காக தனியார்துறை பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் இரு நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது குழப்பம் மற்றும் கசப்புணர்வை உருவாக்குகிறது. அதற்கு பதிலாக தனியார் துறை அரசாங்கத்துடன் புரிந்துணர்வை (MoU) ஏற்படுத்தி மருத்துவமனையை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை வசூலித்து இருக்கலாம். இதன் மூலம் பெறப்படும் வருவாயை கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தி இருக்கலாம். பல கோடி மதிப்பிலான சொத்துக்களை ஒரு பலவீனமான மென்மையான அரசாங்கத்திடமிருந்து பறித்து ஏழை நோயாளிகளுக்கு உரிய பராமரிப்பு அளிக்காமல் தனியார் நிர்வாகம் பின்வாங்கி விடுகிறது. மறுபுறத்தில் அந்த ஏழை நலிவடைந்தவருக்கு குறைந்த விலையில் இலவச, குறைந்த கட்டணத்தில் பராமரிப்பு வழங்கும் பொறுப்பையும் அரசாங்கம் நிறைவேற்றாமல் கைகழுவும்.
பாகுபாடுகள் நிறைந்த அமெரிக்க மாடல்
கேள்வி:அதிகரிக்கும் ஏழை மக்களின் தேவையை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது ‘அமெரிக்க முன்மாதிரி’ நம் நாட்டுக்கு பொருந்துமா? பதில்: மக்களை ஆரோக்கியமாக வைத்திருத்தல், நோய்த் தடுப்பு, மருத்துவமனை செலவுகளை குறைப்பது, நாள்பட்ட நோய் தாக்கும் பொழுது நோயாளிகளுக்கு தொடர்ச்சியான கவனிப்பை உறுதி செய்வது ஆகியவை அமெரிக்க மாடல். தனிநபர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அது நிர்வகிக்கப்படுகிறது. பிரீமியத்தை செலுத்தும் வசதி உள்ளோர்க்கு மட்டுமே இந்த சேவை. ஆனால் பாகுபாடுகள் நிறைந்ததாக இருக்கிறது. முக்கியமான மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சையை மறுக்கின்றது. பல தடைகளையும் உருவாக்குகின்றன. பராமரிப்புச் செலவை செயற்கையாக உயர்த்துகிறது . சமத்துவமின்மையை ஏற்படுத்துகின்றது.இந்தியாவிலும் முதன்மை பராமரிப்பு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பல்வேறு மருத்துவமனைகள் மூலம் அளிக்கப்படுவதால் சேவை வழங்குபவர்களின் மாறுபட்ட திறன்களாலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. முரண்பாடுகளை நிர்வகிக்கவும் குறைகளை நிவர்த்தி செய்வதற்குமான ஒழுங்குபடுத்தும் திறமை( Regulatory Capacity)நம்மிடம் இல்லை. எனவே சிகிச்சை மற்றும் சுகாதாரப் பராமரிப்பு விலை உயர்ந்ததாகிறது.
கோவிட் காலத்தில் அரசு வேடிக்கை பார்த்தது
கேள்வி: எவ்விதமான சமூக பாதுகாப்பும் இல்லாத சூழலில், இந்தியாவில் சுகாதார சேவையை தனியார்மயம் ஆக்குவது பேரழிவிற்கு இட்டுச் செல்லுமா? பதில் : இந்தியாவில் சுகாதாரம் பெருமளவில் தனியார்மயமாக்கப்பட்டுவிட்டது.மேலும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகிறது. தரமான சிகிச்சையை அதிகம் செலவழித்தால் மட்டுமே பெற முடியும். பட்ஜெட் ஆதாரங்கள் சுருக்கப்படுகின்றன. ஒழுங்குபடுத்தும் அரசியல் நேர்மையும் ஆட்சியாளரிடம் இல்லை. குறிப்பாக கோவிட் தொற்றுக்காலத்தில் கூட தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடித்தன. அரசு வேடிக்கை பார்த்தது என்பதே வெட்கக்கேடானது. லாப நோக்கம் பேரழிவு... ஆரம்ப சுகாதார நடைமுறைகளை நம்முடைய அரசாங்கம் கிட்டத்தட்ட கைகழுவிவிட்டது. காப்பீட்டை விரிவு படுத்துவது, பொது மருத்துவமனைகளை முதலீட்டாளர்களிடம் குத்தகைக்கு விடுவது என மிக அநீதியான நடவடிக்கைகள் அதிகரிக்கின்றன. ஏழை எளியவர் மட்டுமல்ல, பெரும்பாலான மக்கள், அதாவது ஐந்தில் ஒரு பகுதியினர் மருத்துவ சேவை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். ஏறக்குறைய ஆறு கோடி பேர் மருத்துவ சேவைக்கு பணம் செலுத்த முடியாத வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். எனவே இந்தச் சூழ்நிலையில் சுகாதார சேவைகளை கண்மூடித்தனமாக, கட்டுப்பாடற்று லாப நோக்கத்துடன் வணிகமயமாக்குவது பேரழிவைத்தான் ஏற்படுத்தும்.
தி இந்து:22/9/24 / தமிழில்: கடலூர் சுகுமாரன்