பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் ஆந்திர மாநில அரசின் செயலுக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன், இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு: பாலாற்றின் குறுக்கே ரூ. 215 கோடியில் புதிய தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டி, பணிகளைத் துவக்கியுள்ள ஆந்திர மாநில அரசின் செயல்பாட்டை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். பாலாற்றில் கர்நாடக மாநில பகுதிகளில் கர்நாடக அரசு 3 தடுப்பணைகளை கட்டியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஏற்கெனவே 21 தடுப்பணைகளை அம்மாநில அரசு கட்டியுள்ளது. தற்போது ரூ. 215 கோடியில் புதிய தடுப்பணையும், மேலும் இரண்டு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் அந்த மாநில முதல்வர் அறிவித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. ஆந்திர மாநிலத்தில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் சிலவற்றின் உயரத்தை 5 அடியிலிருந்து 12 அடி வரை உயர்த்தியதால் பாலாற்றில் தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டு திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சாகுபடிக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் நான்கு மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1892-ஆம் ஆண்டு சென்னை - மைசூர் உடன்படிக்கை அட்டவணை 15-இன் படி மேற்பகுதியில் உள்ள மாநிலங்கள் கீழ்ப் பகுதியில் உள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல் புதிய அணைக்கட்டையோ, அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானங்களையோ, அல்லது நீரைத் திரும்பப் பெறவோ, நீரைத் தேக்குவதற்கு உரிய எந்த செயலையும் செய்ய முடியாது. இவற்றை மீறி ஆந்திர மாநில அரசு தொடர்ந்து பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகளை கட்டிவருகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இச்சூழலில் ஆந்திர மாநில அரசு இதுபோன்ற புதிய தடுப்பணைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா உட்பட நடத்தியிருப்பது இரு மாநிலங்களுக்கிடையே தேவையில்லாத முரண்பாட்டை ஏற்படுத்திடும் செயலாகும். ஆந்திர மாநில அரசு பாலாற்றில் தொடர்ந்து இதுபோன்ற புதிய அணைகள் கட்ட எடுக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு சட்டரீதியாக எதிர்கொண்டு பாலாற்றில் தமிழ்நாட்டின் பாசன உரிமையைப் பாதுகாத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.