புதுதில்லி, ஜூன் 24 - “குஜராத் வன்முறை வழக்கிலிருந்து நரேந்திர மோடியை விடுவித்தது சரிதான்” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக ஜாகியா ஜாப்ரி, தீஸ்தா செதல்வாட் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்களையும் அது தள்ளுபடி செய்துள்ளது. 2002-ஆம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா வில் கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 கர சேவகர்கள் கொல்லப்பட்டனர். இந்த தீவைப்பு படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் சங்-பரிவாரங்கள் மத வன்முறைகளை அரங்கேற்றினர். இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, ‘குல்பர்கா சொசைட்டி’ என்ற இடத்தில் மட்டும் 68 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாப்ரியும் ஒருவர் ஆவார். குஜராத்தில் நடந்த இந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் உயரதிகாரிகள் இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், இதுதொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப் பட்டது.
இந்த விசாரணைக்கு குழு, 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 8 அன்று தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், நரேந்திர மோடி மற்றும் 63 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் இல்லை எனக் கூறி, அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது. இது வன்முறையால் பாதிக்கப்பட்ட இஸ்லா மியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. குல்பர்கா சொசைட்டியில் கொல்லப்பட்ட வர்களில் ஒருவரான காங்கிரஸ் எம்.பி. இசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, சிறப்பு விசாரணைக்குழு அறிக்கையை எதிர்த்து, அகமதாபாத் கீழ் நீதிமன்றம், குஜராத் உயர் நீதி மன்றங்களில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், சிறப்பு விசாரணைக்குழு அறிக்கையையே நீதிமன்றங்களும் உறுதிப்படுத்தின.
இதையடுத்து, ஜாகியா ஜாப்ரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதே போல சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட்டும் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சிடி ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த 2022 டிசம்பர் 9 அன்று தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், “2002 குஜராத் கலவர வழக்கில் இருந்து பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரிக்க எவ்வித முகாந்திரமும் இல்லை. இந்த வழக்கின் விசாரணை மற்றும் இறுதி அறிக்கையை கையாள்வதில் மாஜிஸ்திரேட் மற்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் அணுகு முறையில் விதிமீறல் எதுவும் இல்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம். குஜராத் கலவர வழக்கில் மேல் விசாரணையும் தேவை யில்லை. மோடி குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கையை நிராகரிக்கிறோம். கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி காவல்துறை அறிக்கையை ஏற்று, எதிர்தரப்பு மனுவை நிராகரித்த விசாரணைக் குழுவின் அறிக்கையை ஏற்று, பிரதமர் மோடி உள்ளிட்ட 64 பேரை விடுவித்ததை உறுதி செய்த நீதிமன்ற மேஜிஸ்திரேட் உத்தரவு சரியே! நீதிமன்றத்தில் ஆய்வு மற்றும் முடிவில் எந்த விதிமீறலும் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.