சென்னை, பிப்.8- கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த வழக்கில், 24 ஆயி ரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் குற்றவாளியாக மாணவியின் தாய் செல்வி சேர்க்கப்பட்டி ருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி கடந்த 2022 ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து, ஜூலை 17 அன்று போராட்டம் நடைபெற்ற நிலையில், 300-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
1,152 பக்க குற்றப்பத்திரிகை
கடந்த இரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் விசாரணை யின் முடிவில் விழுப்புரம் நீதிமன்றத்தில் 58 பேர் மீதும், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 858 பேர் மீதும் என மொத்தம் 916 பேர் மீதும், 24 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை வெள்ளிக்கிழமை (பிப்.7) சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக 666 பேர் மீது நீதி மன்றத்திலும், 53 இளம் சிறார்களுக்கு எதிராகவும் சிறார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை பாதுகாப்பிற்காக சேலத்தில் இருந்து வந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியது தொடர்பாக 120-க்கும் மேற்பட்டோர் மீதும், பள்ளி வளாகத்தில் இருந்த பசு மாடுகளை திருடிச் சென்ற வழக்கில் 5 பேர் மீதும், 124 பேருக்கு எதிராக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்கொலைதானாம்!
அதில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தற்கொலையே - பாலியல் தொந்தரவு, கொலைக்கான ஆதாரம் இல்லை எனவும், பள்ளி தாளாளர், செயலாளர், ஆசிரியர்களின் துன்புறுத்தல் எதுவும் இல்லை என சாட்சிகள் கூறியதாகவும், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் மாணவி இறப்புக்கு காரணம் இல்லை என சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சக மாணவர்கள், சாட்சிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படை யில், “ஸ்ரீமதிக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என தெரிய வந்துள்ளது என்றும், மாணவி ஸ்ரீமதி தங்கியிருந்த விடுதியை நடத்த மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெறவில்லை எனவும், மாணவி இறந்த அன்றே, இறப்புக்கான காரணத்தை காவல்துறை சொல்லி யிருந்தால் தொடர் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்காது எனவும் தமிழ்நாடு பெண்கள் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டத்தை, கனியாமூர் பள்ளி பின்பற்றவில்லை என்பதால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான விசாரணை மிக விரைவில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்த முதல் கட்ட விசாரணை விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் பிப்.21 ஆம் தேதி நடைபெறும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் மாணவியின் தாயார் செல்வி முதல் குற்றவாளி எனவும், 2-வது குற்றவாளியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி திராவிடமணி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பான வழக்கில் இது போன்று வேறு எந்த வழக்கிலும் இந்த அளவிற்கு அதிகமானோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக வரலாறு இல்லை என்று சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.