states

கூட்டணிக்கு விலை பேசும் பாஜக பிடி கொடுக்காமல் ஓடும் கட்சிகள்

மார்ச் 15 முதல் 19 வரை தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய 5 மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில்  பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதில் தமிழகத்தில் 3 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் மோடி, 15ஆம் தேதி சேலம், 16ஆம் தேதி கன்னியாகுமரி, 18ஆம் தேதி கோவைக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் வருகையை காட்டி தமிழ்நாட்டில் கூட்டணிக்கு பாஜக ஆள்சேர்க்க முயன்றும் அது நடக்கவில்லை. முக்கிய கட்சிகள் பாஜகவைச் சீண்டத் தயாரில்லை. லெட்டர் பேடு கட்சித் தலைவர்களை வைத்து பாஜக படம் காட்டி வருகிறது. மிரட்டல், உருட்டல்கள் மூலம் மாற்றுக் கட்சியின் முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலருக்கு வலை வீசியும் ஒருவரும் சிக்கவில்லை. தங்களுக்கு செல்வாக்கு என்று மார்தட்டிக் கொண்ட வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கில் இந்தமுறை பெருத்த அடி கிடைக்கும் என்பதால் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலத்தில் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி எப்படியாவது வெற்றி பெறலாம் என்ற நப்பாசையில் பிரதமர் மோடி, 5-ஆவது முறையாக தமிழ்நாட்டுக்கு படையெடுக்கிறார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை கையில் வைத்துக் கொள்ள பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.  ஆனால், மோடி மட்டுமல்ல அமித்ஷா உள்ளிட்ட அந்தக் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் எத்தனை முறை தமிழ்நாட்டில் படையெடுத்தாலும் நடையாய் நடந்தாலும், அவர்களுக்கு மக்கள் பட்டை நாமம் போடுவது உறுதி என்பதே தற்போதைய நிலைமையாக உள்ளது.