வடமாநிலங்களில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த பாஜக-வுக்கு தென்னிந்தியாவில் முதல் வெற்றியைக் கொடுத்த மாநிலம் கர்நாடகம். இத னால், கர்நாடகத்தை தென்னிந்தியாவிற்கான தங்களின் நுழைவாயில் என்று பாஜக-வினர் அழைத்து வந்தனர். ஆனால், 2023 தேர்தல் அந்த கர்நாடக மாநிலமும் பாஜக வுக்கான கதவை அடைத்துள்ளது. தென்னிந்தியாவில் பாஜக எந்த மாநிலத்திலும் ஆட்சியில் இல்லை என்ற நிலையை கர்நாடக மக்கள் ஏற்படுத்தியுள்ளனர். பாஜகவுக்கு கிடைத்த இந்த தோல்வியில், அதிகா ரத்துடன் வலம்வந்த அமைச்சர்களும் கூட தப்ப வில்லை. காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவை தோற்க டித்தே தீருவேன் என்று சூளுரைத்த வீட்டு வசதித்துறை அமைச்சர் வி. சோமண்ணா, வருணா மற்றும் சாம்ராஜ் நகர் என 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இந்நிலை யில் இந்த 2 தொகுதிகளிலும் அமைச்சர் சோமண்ணா தோல்வி அடைந்துள்ளார். வருணா தொகுதியில் சித்தராமையாவிடம் 47 ஆயி ரம் வாக்குகள் வித்தியாசத்திலும், சாம்ராஜ் நகரில் காங்கிரஸ் வேட்பாளர் புட்டரங்க செட்டியிடம் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் அமைச்சர் சோமண்ணா தோல்வி அடைந்துள்ளார். கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் சுமார் 1 லட்சத்து 22 ஆயி ரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக அமைச்சர் ஆர். அசோகா 19 ஆயிரத்து 602 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். மதச்சார்பற்ற ஜனதாதளம் வேட்பாளர் பி. நாகராஜூ இரண்டாமிடம் பிடித்தார்.
கர்நாடக மாநில பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு பெல் லாரி தொகுதியில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார். சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டிற்கான மேலிடப் பொறுப்பாளருமான சி.டி. ரவி, அவரது உதவி யாளரும் காங்கிரஸ் வேட்பாளருமான தம்மையா விடம் 8 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தி யாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். சிக்கமகளூருவில் சி.டி. ரவி நான்குமுறை வெற்றி பெற்றவர். 2018-ஆம் ஆண்டு தன்னை எதிர்த்து போட்டி யிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பி.எஸ். ஷங்கரை 26 ஆயி ரத்து 314 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார். ஆனால், தற்போது அவர் தோற்றுப் போயிருக்கிறார். இதேபோல ஹிரெகெரூர் தொகுதியில் போட்டி யிட்ட பாஜக அமைச்சர் பசனகவுடா பாட்டீல், காங்கிரஸ் வேட்பாளரிடம் 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு கள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். கடந்த ஆட்சியில் காங்கிரசிலிருந்து பாஜக-வுக்கு தாவி அமைச்சர் பதவியை அனுபவித்து வந்த டாக்டர் கே. சுதாகர் சிக்கபல்லாப்பூர் தொகுதியிலும், என். நாகராஜ் பெங்களூர் புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தொகுதியிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியிலி ருந்து பாஜகவுக்கு தாவி அமைச்சரான நாராயண கவுடா மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தொகுதி யிலும் தோல்வி அடைந்துள்ளனர். இவர்கள் தவிர, முத்தோள் தொகுதியில் போட்டி யிட்ட பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள், சன்னபட்னா தொகுதியில் போட்டியிட்ட வரு வாய்த்துறை அமைச்சர் ஆர். அசோக், பீளகி தொகுதி யில் போட்டியிட்ட தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி, எல்புர்கா தொகுதியில் போட்டியிட்ட சுரங்கம் மற்றும் புவியியல் அமைச்சர் ஹாலப்பா ஆச்சார், சிக்க நாயகனஹள்ளி தொகுதியில் போட்டியிட்ட சட்டத்துறை அமைச்சர் ஜே.சி. மாதுசாமி, திப்தூர் தொகுதியில் போட்டியிட்ட கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ், நாவல்குண்ட் தொகுதியில் போட்டியிட்ட துணி நூல் துறை அமைச்சர் சங்கர் முனனேகுப்பா, சிர்சி தொகு தியில் போட்டியிட்ட சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி, ஹுப்ளி தார்வாட் மாவட்டம் நரகுந்தா தொகுதிகளில் போட்டியிட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் சி.சி. பாட்டீல் என கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 15 அமைச்சர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.