தஞ்சாவூர், நவ.19 - உள்நாட்டு மீன் உற்பத்தியில் சிறந்த மாவட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தை தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் தேர்வு செய்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், மீன் வளர்ப்போருக்குக் குறைந்த விலையில் அரசு நிர்ணயிக்கும் விலையில் மீன் குஞ்சுகள் விநியோகம் செய்வதற்காகவும் கரந்தை, நெய்தலூர், அகரப்பேட்டை, திருமங்கலக்கோட்டை ஆகிய நான்கு இடங்களில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கரந்தையில் அரசு நுண் மீன் குஞ்சு பொரிப்பகம் இயங்கி வருகிறது. இதைபோல தனியார் மீன் குஞ்சு உற்பத்தி நிலையங்கள் மாவட்டத்தில் 18 இடங்களில் உள்ளன. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப் பணியின் கீழ் உள்ள 641 ஏரி, குளங்களிலும், தனியார் குளங்களிலும் மீன் உற்பத்தி நடந்து வருகிறது. அதன்படி 32 ஆயிரம் ஹெக்டேரில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 45 ஆயிரம் டன் அளவிற்கு மீன் உற்பத்தி நடக்கிறது. இந்நிலையில், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் 2021–22 ஆம் ஆண்டில், உள்நாட்டு மீன் உற்பத்தி, ஒன்றிய, மாநில அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துதல் என பல்வேறு பிரிவுகளில், நாடு முழுவதும் உள்நாட்டு மீன் உற்பத்தி மையத்தினை தேர்வு செய்யும் போட்டியினை நடத்தியது. இதில், தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் உள்நாட்டு மீன் உற்பத்திக்கான சிறந்த விருதை பெற்றுள்ளது.
இதற்கான சான்றிதழ்கள், 3 லட்சம் ரூபாய் ரொக்கம், விருது வழங்கும் விழா நவம்பர் 21 ஆம் தேதி டாமன் யூனியன் பிரதேசத்தில் நடக்கிறது. நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யான், இணை அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் விருதை வழங்குகின்றனர். விருதை பெறும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தஞ்சாவூர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் கூறுகையில், “2022–23 ஆம் ஆண்டிற்கு 8 கோடி மீன்குஞ்சு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 - 22 ஆம் ஆண்டில் 6.50 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 7 கோடி வரை உற்பத்தி இருந்தது. இதற்கு காரணம் விவசாயிகளின் ஆர்வம், நீர்வளம் ஆகியவைதான். மேலும், குளம் வெட்டுதல், மீன் உற்பத்தி போன்ற பலவற்றுக்கு அரசு வழங்கும் மானியத்தை சிறப்பாக செயல்படுத்தியுள்ளோம். இப்போட்டியில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிலையில், நமது மாவட்டத்திற்கு விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.