இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு நடைபெறும் தேர்வுக்கு அரசு வழங்கிடும் இலவச பயிற்சி வகுப்புகளை பகுதிநேர ஆசிரியர்களும் பயன்பெரும் வகையில் வாரவிடுமுறை நாட்களில் நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு வியாழனன்று அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தவிருக்கும் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும் என்றும், இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டும், ஸ்மார்ட் போர்டு வகுப்புகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது என்றும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற அரசின் அறிவிப்பை பத்திரிகைகளின் வாயிலாக படித்தேன். மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இத்திட்டத்தை அனைத்து மாவட்டத்திற்கும் விரிவுபடுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். பயிற்சி மையங்கள் வேலை நாட்களில் பயிற்சி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பகுதி நேர பணிகளுக்கு செல்லும் யாரும் இதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். அரசின் இந்த நல்ல வாய்ப்பு கிடைக்கவில்லையே என பலர் ஏங்கி தவிக்கின்றனர். எனவே, பகுதிநேர பணியில் உள்ளவர்களும் பயன்பெறும் வகையில் பயிற்சி வகுப்புகளை சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் நடத்திடுவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.