states

ஆதரவு எம்எல்ஏக்கள் அதிருப்தி: பரிதாபத்தில் புதுச்சேரி பாஜக

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையி லான என்.ஆர். காங்கிரஸ் - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் அங்காளன் (திருபுவ னை தனி தொகுதி) சிவசங்கர் (உழவர்கரை), கொல்லப் பள்ளி ஸ்ரீநிவாஸ் (ஏனாம்) ஆகியோர் பாஜக-வுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். தங்களுக்கு வாரியப் பதவி வேண்டும் என்பதும் இவர்களின் நெடுநாள் ஆசை.  ஆனால் ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை வாரிய பதவி வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த இவர்கள், பாஜகவை ஆதரிப்பதால் தங்கள் தொகுதிகள் புறக்கணிப்படுவதாக சட்டமன்றத்திலேயே குற்றம்சாட்டியதோடு, சட்டமன்றத்தின் முன்பு படிக்கட்டில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி 22 அன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது பாஜக ஆதரவு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் சட்டமன்றத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். தனக்கு அரசு பழைய காரை கொடுத்ததால் கார் அடிக்கடி பழுதாவதாகவும், பெட்ரோல் அல வன்ஸ் வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். தனது பழைய காரின் சாவியை சபாநாயகரிடம் ஒப்படைத்தார். பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்களில் சிவசங்கர் தனக்கு பாஜகவில் எம்.பி. சீட் கேட்டு வருகிறார். வாய்ப்பளிக்கா விட்டால் பாஜகவுக்கு அளிக்கும் ஆதரவை சிவசங்கர் வாபஸ் பெற்று தனித்து போட்டியிடுவார் என கூறப்படுகிறது. மற்றொரு பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ-வான கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், ஏனாம் தொகுதியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதனால் தனது தொகுதி புறக்கணிக்கப்படுவதாக அவரும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். பாஜக ஆதரவு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களின் அதிருப்தியும், சொந்தக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் அதிருப்தியும் புதுவை நாடாளுமன்றத் தொகுதியில் களம் இறங்கும் பாஜகவுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்துவது உறுதி.