மும்பை, ஜூன் 13 - அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில், அது தற்போது 78 ரூபாய் 27 காசுகள் என்ற அளவிற்கு மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு இருண்ட குளிர் காலத்தை நோக்கி சென்று கொண்டிருப்ப தாகவும், அடுத்த 5 முதல் 6 மாதங்களில் அது 81 ரூபாய் வரை சரிவைச் சந்திக்கும் என்றும் பொருளாதார தரமதிப்பீட்டு நிறுவனங்கள் அண்மையில் எச்சரித்து இருந்தன. அதனை உண்மையாக்கும் வகையில், இந்திய ரூபாய் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய சந்தைகளிலிருந்து அந்நிய நேரடி முதலீடு வெளியேற்றம் ஆகியவை மட்டுமே ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணமாக இருந்துவந்த நிலையில், அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பணவீக்கம், அதன்காரணமாக அந்நாட்டு பெடரல் வங்கி வட்டி உயர்வை அறிவிக்க இருப்பது, சீனாவில் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாடுகளால் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள சிக்கல் ஆகியனவும் தற்போது சேர்ந்து கொண்டுள்ளது. உக்ரைன் உடனான சண்டையைக் காரணம் காட்டி, ரஷ்யா மீது அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் பொருளாதாரத் தடை விதித்தன. உலகின் மிகமுக்கியமான கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக ரஷ்யா திகழும் நிலையில், அந்நாட்டுக்கு தடை விதிப்பதன் மூலம் ஏற்படும் விளைவுகளை இந்த நாடுகள் அப்போது பெரிதாக கணிக்கவில்லை. ஆனால், ரஷ்யா - உக்ரைன் போரால் உலகளாவிய அள வில் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, தற்போது உலகப் பொருளா தாரத்தையே குலுக்கத் துவங்கியுள்ளது. ரஷ்யாவை புறக்கணிப்பதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று வலிக்காதது போலவே காட்டிக்கொண்டு வந்த அமெரிக்கா, மே மாதத்திற்கான பணவீக்கத் தரவுகள் மூலம், தான் வாங்கியிருக்கும் அடி எவ்வளவு? என்பதை அதுவாகவே வாய்விட்டுக் கதறி யிருக்கிறது.
அமெரிக்காவின் 2022 மே மாதத்திற்கான பணவீக்கம் 41 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது. டிசம்பர் 1981-க்குப் பின் அமெரிக்காவின் உச்சபட்ச நுகர்வோர் பணவீக்கத்தை அந்நாடு சந்தித்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், அமெரிக்காவில் 2022 மே மாதத்தில் எரிபொருள் விலை சுமார் 34.6 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதன் வாயிலாக அடுத்த சில நாட்களில் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி, ரிசர்வ் வட்டியை கடுமையாக உயர்த்தப் போவது உறுதியாகியுள்ளது. அவ்வாறு அமெரிக்க பெடரல் வங்கி, ரிசர்வ் வட்டியை உயர்த்தினால், அமெரிக்கப் பத்திரச் சந்தைக்குள் நுழைந்து விடுவதற்கு, முதலீட்டாளர்கள் இப்போதே தயாராகி விட்டனர். சர்வதேச சந்தைகளில் இருந்து தங்களின் டாலர் முதலீடுகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், உலகின் அனைத்து வர்த்தகச் சந்தைகளிலிருந்தும் முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதனால், திங்களன்று மட்டும் ஆசிய பங்குச் சந்தைகள் 2.7 சதவிகிதமும், அமெரிக்கா வின் பியூச்சர் குறியீடு 1.3 சதவிகிதம் வரை யிலும் சரிவைக் கண்டன. இந்த வரிசையில், இந்தியப் பங்குச் சந்தைகளான சென்செக்ஸ், நிப்டி ஆகியன திங்களன்று 2.68 சதவிகிதம் சரிவு கண்டன.
வர்த்தக நேர முடிவின்போது மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 1,456.74 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 52,846.790 புள்ளி களில் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசியப் பங்குச் சந்தைக் குறியீடான நிப்டி 427.40 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 15774.40 புள்ளிகளில் நிறைவடைந்தது. எஸ்பிஐ, பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி பங்குகள் மதிப்பு சரிவடைந்து, பொதுத்துறை வங்கி குறியீடு 3 சதவிகிதம் அளவுக்கு சரிவைக் கண்டன. அல்ட்ராடெக் சிமெண்ட், குஜராத் கேஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறு வனங்களின் பங்கு மதிப்பு, 52 வாரங்களில் இல் லாத அளவுக்கு குறைந்தபட்ச பங்கு விலைக்கு சென்றன. டாடா மோட்டார்ஸ், அசோக் லேலேண்ட் உள்ளிட்ட ஆட்டோமொபைல் பங்கு களின் குறியீட்டெண் 1 சதவிகிதம் சரிவடைந்தன. ஒட்டுமொத்தமாக உலோகம், ஐ.டி, உள்பட அனைத்துத் துறை பங்குகளின் மதிப்பும் 3 சதவிகிதம் அளவுக்கு சரிவடைந்தன. இவற்றின் காரணமாக இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் திங்களன்று ஒரே நாளில் ரூ. 5 லட்சத்து 47 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பைச் சந்தித்தனர். அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 78 ரூபாயைத் தாண்டி சரிவைச் சந்தித்துள்ளது. திங்களன்று ஒரேநாளில் மட்டும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு 36 காசுகள் சரிந்து, புதிய உச்சமான 78 ரூபாய் 29 காசு களைத் தொட்டுள்ளது. இந்த வாரம் முழுவதுமே ரூபாயின் மதிப்பு பலவீனமாக இருக்கும் என்றும், 78 ரூபாய் 20 காசுகள் முதல் 78 ரூபாய் 50 காசுகள் அளவிற்கு சரிவைச் சந்திக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றன.