states

‘‘நாங்க ஒரே மாதிரி இல்லை; ஆனா, ஒன்னாத்தான் இருக்கோம்’’

“நாங்கள் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை; ஆனா, நாங்க ஒன்னாத்தான் இருக்கோம்” என்ற புதுகை பூபாளம் கலைக்குழுவின் பாடல் வரிகளோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரையில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு ஞாயிறன்று துவங்கியது. மாநாட்டிற்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் வரவேற்புரையாற்றினார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி (திமுக), கார்த்திகேயன் (காங்கிரஸ்), மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மகபூப்ஜான் (மதிமுக) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், கே.சாமுவேல்ராஜ், மூத்த தலைவர்கள் எஸ்.பாலசுப்பிரமணியன், சி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர்கள் மா.கணேசன் (மதுரை மாநகர்), கே.இராஜேந்திரன் (மதுரை புறநகர்), கே.அர்ச்சுணன் (விருதுநகர்), ஏ.வி.அண்ணாமலை (தேனி), ஆர்.சச்சிதானந்தம் (திண்டுக்கல்), வி.காசிநாததுரை (இராமநாதபுரம்), ஆர்.கே.தண்டியப்பன் (சிவகங்கை), மதுரை மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.லாசர், இரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, மகாலெட்சுமி உட்பட மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டிச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். கட்சியின் முனிச்சாலை பகுதிக்குழுச் செயலாளர் ஜெ.லெனின் நன்றி கூறினார்.  பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரியின் ஆங்கில உரையைத் தீக்கதிர் பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன் தமிழில் மொழியாக்கம் செய்தார். மாநாட்டிற்கு வந்திருந்த சீத்தாராம்யெச்சூரியை சிறுவர்-சிறுமிகள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவியைத் திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மதிமுக கையெழுத்து இயக்கம் நடத்துகிறது. மதுரை மாநாட்டில் பங்கேற்ற சீத்தாராம்யெச்சூரி அந்தப்படிவத்தில் கையெழுத்திட்டார்.

தீர்மானம்

மணிப்பூர் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று மாநில பாஜக அரசு பதவிவிலக வேண்டுமென வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை எஸ்.கே.பொன்னுத்தாய் முன்மொழிந்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் கே.இராஜேந்திரன் வழி மொழிந்தார்.