states

தென்மேற்கு பருவ மழை குமரியில் தொடங்கியது

நாகர்கோவில், ஜூன் 13- குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி 3 மாதங்கள் பெய்யும். ஆனால் நடப்பாண்டில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிய பின்னரும் குமரி மாவட்டத்தில் மழை தொடங்காமல் இருந்தது. அதே வேளையில் மழைக்கான அறிகுறிகள் தென்பட்டும் வந்தது.  இந்த நிலையில் மலையோரப் பகுதிகள், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைப் பகுதிகள் மற்றும் பூதப்பாண்டி, களியல், குழித்துறை, தக்கலை, குளச்சல், இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அடையாமடை பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்ததையடுத்து ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 57 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.  மேலும் மழை தொடங்கியதால் வெயிலின் தாக்கம் இல்லாமல் குளிர்ச்சியான கால நிலை நிலவுகிறது. பள்ளிக்கூடங்கள் திறந்த முதல் நாளில் வெயிலின் தாக்கம் குறைந்து சாரல் மழை பெய்ததால் வகுப்பறைகளில் மாணவர்கள் உற்சாகமாக காணப்பட்டனர்.