சென்னை, செப்.11- தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி புதனன்று (செப்.11) சென்னையில் தொடங்கியது. வரும் 13 ஆம் தேதி வரை சென்னை நேரு விளையாட்டரங் கில் நடைபெறும் இந்த போட்டியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆசிய தடகள கூட்ட மைப்பு தலைவர் தாளன் ஜிமான் அல்-ஹமத் உள்ளிட்ட பலரும் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மொத்தம் 7 நாடுகளில் இருந்து 173 வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். அதிகப்பட்சமாக இந்தியாவில் இருந்து 62 வீரர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 9 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் வருண் ஓரி மனோகரன் மற்றும் அபிநயா ராஜ ராஜன் ஆகியோர் 100 மீட்டர் ஓட்டத்திலும், ஹரிஹரன் கதிரவன் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்திலும் ஆர்.சி.ஜித்தன் அர்ஜுனன், பிரத்திக்ஷா யமுனா மற்றும் லக்ஷன்யா ஆகியோர் நீளம் தாண்டுதல், ரவி பிரகாஷ் மற்றும் பிரதிக்ஷா யமுனா ஆகியோர் மும்முறை தாண்டும் போட்டியிலும், கார்த்திகேயன் மற்றும் கனிஷ்டா டீனா ஆகியோர் தொடர் ஓட்டத்திலும் பங்கேற்கின்றனர். இலங்கை 54 , பாகிஸ்தான் 12, பூட்டான் 5, நேபாளம் 9, வங்கதேசம் 16, மாலத்தீவு 15 வீரர்கள் இந்த தடகள போட்டி யில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக போட்டிகளில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு தடகள கூட்டமைப்பு நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தெற்காசிய இளையோர் தடகள போட்டி, 29 ஆண்டுகளுக்குபிறகு தமிழகத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.