states

img

சாலைப் பணியாளர்கள் சங்க மாநில மாநாடு பேரணி - பொதுக்கூட்டத்துடன் நிறைவு

உடுமலைப்பேட்டை, செப்.10- தமிழ்நாடு நெடுச்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் மாநில மாநாடு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் திருப்பூர் மாவட்டம், உடுமலையில் நடைபெற்றது.  மாநாட்டின் இரண்டாம் நாள் சனியன்று மாலை, நகராட்சி அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய பேரணியை தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் ச.செல்லத்துரை துவக்கி வைத்தார்.  இப்பேரணி, உடுமலையின் முக்கிய வீதிகளில் சென்று, தாஜ் தியேட்டர் அருகே நிறைவுற்றது. இதன்பின் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் சோ.பாலகிருஷ்ணன் வரவேற்றார். நெடுச்சாலைத்துறை பொறியாளர் சங்கத்தின் கண்ணன் துவக்கவுரையாற்றினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, அகில இந்திய இன்ஸ்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் க.சுவாமிநாதன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ.அம்சராஜ் உரையாற்றினார்.  நிறைவாக, மாநிலப் பொருளாளர் இரா.தமிழ் நன்றி கூறினார்.  இதில், ஏராளமான நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனர்.