சென்னை, அக்.31- கோவை மாநகரில் அக். 23 அன்று அதிகாலை உக்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தினையடுத்து, விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் அவ்விடத்தில் தடயங்கள் ஏதும் கலைக்கப்பட்டு விடாமல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் தனிப்படை கள் மூலம் புலன் விசாரணை முடக்கி விடப்பட்டு 148 தடயங்கள் சேகரிக்கப்பட்டு, வெடிபொருட்கள் கைப்பற்றப் பட்டு, அச்சம்பவம் தொடர்பாக 5 பேர் அக்.24அன்றே கைது செய்யப்பட்டனர். மறுநாள் 6-வது நபரும் கைது செய்யப் பட்டார். அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்றி சமூக அமைதியை நிலைநாட்டும் வகையில் சேவையாற்றிய காவல்துறையினரின் இப்பணியைப் பாராட்டி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை மாநகர காவல் ஆணையர் வி. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 58 காவல் அதி காரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச் சான்று வழங்கினார்.