states

துணை மருத்துவ மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்குக!

சென்னை, மே 9- துணை மருத்துவ மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்கக் கோரி மே 15 இல் கையெழுத்து இயக்கம் நடத்துவதென ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு துணை மருத்துவ மாணவர் சங்கத்தின் (TNAHSSU)  ஆலோசனைக்குழு  கூட்டம் செவ்வாயன்று சென்னையில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி, மாநில துணைத்தலைவர் சம்சீர் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.   துணை மருத்துவ மாணவர்களுக்கு மாதாந்திர உதவி தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். விடுதி வசதியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். துணை மருத்துவத்திற்கான கவுன்சில் அமைக்க வேண்டும். இம்மாணவர்களுக்கான தனி பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும். துணை மருத்துவப்படிப்புகளில் முதுநிலை பட்டப்படிப்பு துவங்க வேண்டும். கலை-இலக்கிய, விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கோரிக்கைகளை முன்வைத்து மே 15 முதல் கையெழுத்து இயக்கம் நடத்துவது என்றும் அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது சென்னையில் கோரிக்கை பேரணி நடத்துவது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளராக  க.வி.ஸ்ரீபத், இணை ஒருங்கிணைப்பாளர்களாக யோகேஸ்வரி, ராகவேந்திரன், வெற்றிவேல், துணை ஒருங்கிணைப்பாளர்களாக யமுனாதேவி, திவாகர், மணிந்தர்நாதன் ஆகியோரைக் கொண்ட புதிய மாநில ஒருங்கிணைப்புக்குழு தேர்வு செய்யப்பட்டது.