states

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிடுக!

சென்னை,நவ.18- மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த  மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு உரிய நிவாரணத்தை விரைவாக வழங்க வேண்டும் என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:    தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக தமிழகத்தில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், பெரம்பலூர், திருவள்ளூர், கன்னியாகுமரி போன்ற பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான கால்நடைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான வீடுகள் மழை நீரால் சூழப்பட்டு, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக கடந்த 10 ஆம் தேதி 122 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் 44 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்ததால், மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 90 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மழை நீரால் குழப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான கால்நடைகள் மடிந்துள்ளன. மாவட்டத்தில் நான்கு வழி சாலை, புறவழிச் சாலை போன்ற சாலை பணிகளால் வடிகால் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்பட்டதாலும், தூர்வாரும் பணி முழுமையாக நடைபெறாததாலும் மயிலாடுதுறை மாவட்டம் மிகப்பெரிய பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. 

எனவே,  மயிலாடுதுறை மாவட்டத்தைப் பேரிடர் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.  மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரமும், கரும்பு, வாழை, தோட்டக்கலை பயிர்கள் மற்றும் இதர பயிர்களுக்கு பாதிப்புக்கேற்றவாறு இழப்பீடும் வழங்க வேண்டும். மழையால் இறந்துபோன கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு, குடும்ப அட்டைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாயும், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரனத் தொகையை மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் தாலுகாக்களுக்கும் அறிவிக்க வேண்டும். மாநில அரசு, பாதிப்புகளைக் கணக்கெடுக்கும் பணியைக் காலதாமதம் செய்யாமல் விரைவாக தொடங்கி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உரிய நிவாரணத்தை விரைவில் வழங்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசு தேவையான பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும். அதனை விரைந்து பெற்றிட தமிழ்நாடு அரசுதேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.