புதுதில்லி, ஏப். 26 - உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் வாரன் பப்பெட்டை பின்னுக்கு தள்ளி, இந்தியாவின் கவுதம் அதானி 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். உலகப் பெரும்பணக்காரர்களின் பட்டியலை ‘போர்ப்ஸ்’ (Forbes)செய்தி நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கான பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும், பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பருமான அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி உலகின் 5-ஆவது பெரும்பணக்காரராக உருவெடுத்துள்ளார். கவுதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு, திங்களன்று காலை வர்த்தக நிலவரப்படி ரூ. 9 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. இதன் மூலம், ரூ. 9 லட்சத்து 25 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் உலகின் 5-ஆவது பெரும்பணக்காரராக இருந்த வாரன் பப்பெட்-டை அதானி பின்னுக்குத் தள்ளினார்.
இதன்மூலம் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அதானிக்கு முன்னதாக, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைவரான எலான் மாஸ்க் (ரூ. 20 லட்சத்து 50 ஆயிரம் கோடி), அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் (12 லட்சத்து 93 ஆயிரம் கோடி), பிரான்ஸ் நாட்டின் ஆடம்பர பொருட்கள் விற்பனையாளர் பெர்னார்ட் அர்னால்ட் (ரூ. 12 லட்சத்து 76 ஆயிரம் கோடி), மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ் (ரூ. 9 லட்சத்து 89 ஆயிரம் கோடி) ஆகிய நான்கு பேர் மட்டுமே உள்ளனர். இந்தியாவின் முதல்பெரும் பணக்காரர் என்ற இடத்தில் இருந்து வந்தவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஆவார். தற்போது அந்த முகேஷ் அம்பானியைக் காட்டிலும் 900 கோடி அமெரிக்க டாலர் கூடுதல் சொத்து மதிப்பு கொண்டவராக அதானி மாறியிருக்கிறார். அதானி குழும நிறுவனங்களான அதானி மின் உற்பத்தி, அதானி துறைமுகம் ஆகியவற்றின் பங்குகள் அதிகளவில் வளர்ச்சி அடைந்ததே அதானியின் இந்த ஏற்றத்திற்குக் காரணம் என்றும், விரைவில் அவர் உலகின் 2-ஆவது பெரும்பணக்காரராக மாறினாலும் ஆச்சரியமில்லை என்றும் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.