states

காங்கிரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது கடமையென்றால் பாஜகவுக்கு ஏன் அனுப்பவில்லை?

“எந்தக் கட்சியாக இருந்தாலும் வருமான வரியை முறையாக தாக்கல் செய்வது அவசியம். காங்கிரஸ் கட்சி அந்த விதியை முறையாகப் பின்பற்றவில்லை. எனவே வரி செலுத்தக்கூறி காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை தனது கடமையைத் தான் செய்துள்ளது” என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செவ்வாயன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் வருமான வரித்துறை முறையாகத்தான் செயல்பட்டுள்ளதா? அல்லது நிதியமைச்சரின் உத்தரவுக்கு ஏற்பதான் இந்த கடமையைச் செய்துள்ளதா? பொதுவாக வருமான வரியை செலுத்துவதற்கு - கணக்கை தாக்கல் செய்வதற்கு நிதி ஆண்டின் கடைசி அல்லது சில கால அவகாசம் தானே வழங்கப்படும். அந்தக் காலத்தில் செலுத்தாதவர்கள் அல்லது கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுப்பது தானே வருமான வரித்துறையின் கடமை. 2018 - 19 ஆம் வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதில் 45 நாள்கள் கால தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் சில வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. காலதாமத அபராதம் ரூ.210 கோடி செலுத்த உத்தரவிட்டது.  மேலும் 4 வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.135 கோடியை எடுத்துக்கொண்டது. இதை எதிர்த்து காங்கிரஸ் நீதிமன்றம் சென்றது. அப்படியா, நீதிமன்றமா செல்கிறீர்கள் என அடுத்தகட்ட தாக்குதல் தொடங்கியது. 2017-18 முதல் 2020-2021 வரையிலான 4 ஆண்டுகளுக்கு நிலுவைத் தொகையாக ரூ.1823கோடி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. இப்படியாக 2014-15 முதல் 2016-17 க்கு ரூ.1,745 கோடியும் , 2017-18 முதல் 2020-21-க்கு ரூ.1,823கோடியும் என மொத்தம் ரூ.3,568 கோடி செலுத்த கட்டளையிட்டுள்ளது.  இதுதான் வருமான வரித்துறை செயல்படும் முறையா? பத்தாண்டுகளாக கும்பகர்ண தூக்கத்தில் இருந்ததா?இப்போது திடீர் என தூங்கி எழுந்து படுவேக, பாய்ச்சல் நடவடிக்கை எடுத்திருக்கிறதா? அல்லது எஜமானர்களின் கண்ணசைவுக்கு ஏற்ப காங்கிரஸ் மீது நடவடிக்கை பாய்ந்திருக்கிறதா?  

தேர்தல் பத்திர நன்கொடை விவகாரத்தில் அசிங்கப்பட்டு நின்ற பாஜக, தனது கறையைப் போக்குவதற்காக, திசை திருப்புவதற்காக, இன்னும் சொல்லப் போனால் தேர்தல் யுத்தத்தில் எதிரில் நிற்கும் போராளியின் ஆயுதங்களை பறிப்பதாக நினைத்துக் கொண்டு இத்தகைய இழிவான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை நாட்டுமக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கான காரணங்கள் போல் பாஜகவுக்கும் காரணம் இருக்கிறது. அதன்படி பார்த்தால் 4 ஆயிரம் கோடிக்குமேல் பாஜக செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் பாஜகவுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பது நியாயம் தானே! முன்னாய் நிதியமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான ப.சிதம்பரம்,  அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை மீறி பழிவாங்கும் நடவடிக்கையாக வருமான வரித்துறை செயல்படுகிறது என்று கூறியதையும் புறந்தள்ள முடியாது. - ப.முருகன்