states

மேலும் ஒரு ரவுடியை ‘கவுரவித்த’ பாஜக

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா (எ) என். குணசேகரன். இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு  தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டது தொடர்பாக கொலை, கொள்ளை முயற்சி,  ஆள் கடத்தல் என 48 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன. குறிப்பாக, இந்த 48 வழக்குகளில் 8 கொலை வழக்குகள், 11 கொலை முயற்சி வழக்குகள் ஆகும். இந்நிலையில் வழக்கு ஒன்றில், படப்பை குணாவை வெள்ளைத்துரை தலைமையில் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.  தன்னை காவல்துறையினர் எப்படியும் கைது செய்து விடுவார்கள் என அறிந்த படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர், 2022 நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.  படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் மாவட்டப் பொறுப்பில் உள்ளார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் கவுன்சிலராகவும் பதவி வகித்து வருகிறார். படப்பை குணாவும் மறைமுக மாக பாஜகவுக்கு நிதி உதவிகள் உள்ளிட்டவற்றை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின.  இந்தநிலையில் பாஜக காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கே.எஸ். பாபு வெளியிட்டுள்ள அறிக்கை யில், மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் வழிகாட்டுதலின்படியும், மாநிலச் செயலாளரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோத் பி.செல்வம் ஒப்புதலின்படியும், காஞ்சிபுரம் மாவட்ட பார்வையாளர் பாஸ்கர் ஆலோசனைப் படியும், மாநில ஓபிசி அணி தலைவர் சாய் சுரேஷ் ஆலோசனைப் படியும் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணித் தலைவராக குணசேகரன் நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளைக் கொண்ட பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா, பாஜக மாநில பட்டியல் அணி மாநிலச் செயலாள ராக நியமிக்கப்பட்ட நிலையில், ரவுடி படப்பை குணாவிற்கும் ஓபிசி அணி மாவட்டத் தலைவராக பதவி வழங்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.