கோவை, ஜன. 9 - கோவையில் பீப் பிரியாணி விற்கக் கூடாது என மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இடதுசாரிக் கட்சிகள் சார்பில் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டம், கணபதியை அடுத்த உடையாம்பாளையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த தம்பதி ரவி – ஆபிதா, தள்ளுவண்டி கடையில் பீப் பிரியாணி மற்றும் பீப் சில்லி விற் பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, (மாநகர் மாவட்டச் செயலாளர் - பாஜக ஓ.பி.சி அணி) என்பவர் மாட்டிறைச்சி பிரியாணி விற்கக்கூடாது என தொடர்ந்து அத்தம்பதியை மிரட்டி வந்துள்ளார். “யாரைக் கேட்டு விற்பனை செய்து வருகிறீர்கள்? என பாஜக நிர்வாகி கடைக்காரரை மிரட்டுவதும், அதற்கு அந்த கடையில் உள்ள பெண்மணி, எங்களுக்கு தெரிந்த தொழிலை செய்கிறோம், உங்களை வற்புறுத்தி எதையும் சாப்பிடச் சொல்லவில்லை. விரும்புகிறவர்கள் வந்து சாப்பிடு கிறார்கள். உங்களுக்கு என்ன?” என்று நியாயம் கேட்பதும் வீடியோவாகவும் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினரும், பீப் பிரியாணி கடையை, தள்ளிச் சென்று வேறு ஒரு இடத்தில் வைக்கு மாறு கூறியுள்ளனர். எனவே, இதுதொடர்பாக ரவி, ஆபிதா ஆகியோர் காவல் ஆணையரி டம் முறையிட்டு மனு அளித்துள்ளனர். இந்நிலையில், இடதுசாரி கட்சியின ரும், வியாழனன்று கோவை மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், உடையாம்பாளையம் பகுதியில் ஒரு சாலையோர கடையில் பீப் பிரியாணி கடைக்காரர்களை பாஜக நிர்வாகி மிரட்டும் காணொளி இணை யத்தில் வைரலாகி வருகிறது. இது அந்த வட்டாரத்தில் சமூக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகரம் கடந்த காலங்களில் சந்தித்து வரும் பல பிரச்சனைகளின் நீட்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. எனவே இதுகுறித்து முழுமையாக விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, உணவு என் பது தனிப்பட்ட விஷயம். அவரவரு டைய விருப்பப்படி உணவு தயாரித்து விற்பதும், வாங்கி உண்பதும் தனிநபர் சார்த்த உரிமையாகும். சாதியை, மதத்தை, பகுதியை கார ணம் காட்டி மறுப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அதோடு சட்டத்துக்கு உட்பட்ட ஆட்சி தான் நிலை நிறுத்தப்பட வேண்டும். ஊர் கட்டுப்பாடு என்கிற உண்மைக்கு புறம் பான பிரச்சாரங்களை அனுமதிக் கக்கூடாது என வலியுறுத்தப் பட்டுள்ளது. முன்னதாக, இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஜய்குமார், கே.எஸ். கனகராஜ், சிபிஎம் மாமன்றக்குழுத் தலைவர் வி. இராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்ட துணைச்செய லாளர் ஜேம்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, பாஜக நிர்வாகி சுப்பிரமணி மீது துடியலூர் காவல்துறையினர், 126(2), 192, 196, 351/2 உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.