states

மலைக்கிராம வனவிவசாயிகளை சந்தித்தார் பெ.சண்முகம்

கடமலைக்குண்டு, ஏப்.16- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றிய வனப்பகுதியில் வசித்து வரும் அரசரடி, இந்திராநகர், பொம்மராஜபுரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மலைக்கிராம வன விவசாயிகளை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற கடந்த மாதம்  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மேலும் தமிழகம் முழுவதும் வனப்பகுதிகளில் மலைமாடுகளை மேய்க்கவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  இது தொடர்பாக ஏப்ரல் 18 திங்கள்கிழமையன்று கடமலைக்குண்டு தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர்  பெ.சண்முகம் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று பெ. சண்முகம் மற்றும் விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன்,  மாவட்டச் செயலாளர் கண்ணன் தும்மக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் பொன்னழகு சின்னகாளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் போஸ் உள்ளிட்டோர் வாலிப்பாறை ஓயாம்பாறை, சீலமுத்தையாபுரம், காந்திகிராமம், முருக்கோடை உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று விவசாயிகளை சந்தித்து அவர்களது விளைநிலங்களை பார்வையிட்டனர்.  மேலும் வனத்துறை நெருக்கடி உள்ளிட்டவை தொடர்பாக விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் திங்கள்கிழமை நடைபெற உள்ள கூட்டத்திற்கு அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தனர். இந்த வன விவசாயிகளின் கூட்டத்தில் மலைக்கிராம விவசாயிகளை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை எதிர்த்து சட்டரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.