states

img

ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் 5 லட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடி

காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் 5 லட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிர்களில் கடைமடை பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நேரடி விதைப்பு குறுவைப் பயிர்கள் நீர் இல்லாமல் கருகிவிட்டன. எஞ்சிய பயிர்களை காப்பாற்றுவதற்கு நீண்ட போராட்டத்திற்கு பின்பு  காவிரி மேலாண்மை ஆணையம் கூடி தமிழகத்திற்கு உடன் தண்ணீர் திறக்க வலியுறுத்தியது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வழங்க வேண்டிய தண்ணீரை முழுமையாக வழங்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. உடனடியாக விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம்  தனி அமர்வு அமைக்கப்படும் என அறிவித்தது. ஆகஸ்ட் இறுதிவரை 65 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என தமிழக அரசு வாதிடுகிறது. இந்த நிலையில் கர்நாடகா அரசு தற்போது திறந்துவிடும் தண்ணீரை கூட திறக்கக் கூடாது என மாநில பாரதிய ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது .தமிழகத்தின் காவிரி உரிமையை மதித்து தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடகம் திறந்து விட மறுப்பதையும் நீர் திறப்புக்கு எதிராக கர்நாடகாவில்  பாஜக போராடும் நிலையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி இரட்டை வேடம் போட்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதையும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம்