தூத்துக்குடி.ஏப். 1 தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் உள்ள 24 சார்பதிவாளர் அலுவலகங்களும் இணைக்கப்பட்டு ஒரே தூத்துக்குடி பதிவு மாவட்டமாக செயல்பட வேண்டுமா? என்பது குறித்து கருத்து கேட்கும் கூட்டம் வருகிற 8ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு “தமிழக முதல்வரின் ஆணையின் படியும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் ஆணையின் படியும் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணங்கள் பதிவு செய்தவுடன் எளிதாக பட்டா மாற்றம் செய்வதற்கும் மற்றும் பொதுமக்களின் வசதிக்காகவும் ஒரே வருவாய் மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் அந்த வருவாய் மாவட்டத்திலேயே உள்ள பதிவு மாவட்டத்தில் இணைப்பதற்கும், மற்றும் ஒரே வருவாய் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் அந்த வருவாய் வட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திலேயே இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் உள்ள 24 சார்பதிவாளர் அலுவலகங்களும் இணைக்கப்பட்டு ஒரே தூத்துக்குடி பதிவு மாவட்டமாக செயல்பட வேண்டுமா, அல்லது தூத்துக்குடி பதிவு மாவட்டம் மற்றும் கோவில்பட்டி பதிவு மாவட்டம் என இரண்டு பதிவு மாவட்டங்களாக செயல்பட வேண்டுமா, என்பது குறித்து பொதுமக்களிடையே கருத்து கேட்கும் கூட்டமானது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 08.04.2022 அன்று முற்பகல் 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தவறாது இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்ட பதிவு மாவட்டங்கள் சீரமைப்பு குறித்த தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.