states

திரிபுராவில் பாஜக-வை விட்டு ஓட்டம் பிடிக்கும் எம்எல்ஏ-க்கள்!

அகர்தலா, டிச. 30 - திரிபுரா மாநிலத்தில், மேலும் ஒரு எம்எல்ஏ பாஜக-வை விட்டு ஓட்டம் பிடித்துள்ளார். இதன்மூலம் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 5 எம்எல்ஏ-க்கள் பாஜக-விலிருந்து விலகியுள்ளனர். திரிபுராவில், 2013 சட்டமன்றத் தேர்தலில், ஓரிடத்தில் கூட வெற்றிபெறாத பாஜக 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ‘ஆபரேசன் லோட்டஸ்’ மூலம் காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்தும், பிரிவினைவாத மற்றும் இனவாதக் குழுக்களை கூட்டணி சேர்த்துக் கொண்டும் அதிகாரத்தைப் பிடித்தது. மொத்தமுள்ள 60 இடங்களில் 36 இடங்களில் வெற்றிபெற்றது. எனினும், கடந்த 5 ஆண்டு காலமும் உள்கட்சிப் பூசலால் பாஜக-வுக்கு சோதனைக் காலமாகவே இருந்தது. முதல்முறையாக வெற்றிபெற்ற மாநிலத்தில், 5 ஆண்டு முடிவதற்குள் 2-ஆவது முதல்வரை நியமிக்க வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டது. ஆனால், முதல்வரை மாற்றியும் பிரச்சனை தீரவில்லை. பாஜகவின் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி, தனக்கிருந்த 5 எம்எல்ஏ-க்களில் 3 பேரை இழந்தது. பாஜக-வும் அடுத்தடுத்து எம்எல்ஏ-க்களை இழந்து வந்தது. பாஜகவிலிருந்தும் 4 எம்எல்ஏ-க்கள் ஓட்டம் பிடித்தனர். இதன்மூலம் மொத்தம் 7 எம்எல்ஏ-க்களை பாஜக பறிகொடுத்தது. கூட்டணியுடன் சேர்த்து 31 எம்எல்ஏ-க்களின் ஆதரவோடு வண்டியை ஓட்டி வந்தது.  இந்நிலையில், புதனன்று பாஜக-வைச் சேர்ந்த மற்றுமொரு எம்எல்ஏ ஓட்டம் பிடித்துள்ளார். தற்போது பாஜக-வில் இருந்து வெளி யேறி உள்ள திபா சந்திரா மொத்தம் 4 முறை எம்எல்ஏ-வாக இருந்த வர். இதில் 3 முறை காங்கிரஸ் கட்சி சார்பில் எம்எல்ஏ-வாக இருந்த வர். அவரைத்தான் கடந்த தேர்தலில் பாஜக, தன்பக்கம் இழுத்துக் கொண்டது. தற்போது அவர் விட்டால் போதும் என்று ஓட்டம் பிடித்துள்ளார். இதன்மூலம் ஓராண்டில் பாஜக-விலிருந்து விலகிய எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.