மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சி தானந்தம் எழுப்பிய கேள்விக்கு வணிக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா அளித்த பதில், ஒன்றிய அரசின் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டங்களின் உண்மை நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. ஆத்மநிர்பார் பாரத் என்ற பெயரில் பெருநிறுவனங் களுக்கு பல்வேறு ஊக்கத்தொகைகளை வழங்கி வரும் ஒன்றிய அரசு, வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் மூலதன செலவு சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்களின் (PLI, DLI, Capex) கீழ் லட்சக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், வேலைவாய்ப்பு உருவாக்கம் மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது. செமிகான் இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.76,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐந்து செமிகண்டக்டர் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மொத்தம் ரூ.1,52,000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. ஆனால் இத்தனை பெரிய முதலீட்டில் வெறும் 25,000 நேரடி வேலைவாய்ப்புகளும், 60,000 மறைமுக வேலை வாய்ப்புகளும் மட்டுமே உருவாக்கப்பட உள்ளன. அதாவது ஒரு வேலைவாய்ப்பை உருவாக்க சுமார் ரூ.1.80 கோடி செலவிடப்படுகிறது. ஐடி (IT) வன்பொருள் துறையில் ரூ.17,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் பிஎல்ஐ (PLI) 2.0 திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சராசரியாக 5% ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. லேப்டாப், டேப்லெட், சர்வர்கள் போன்றவற்றின் உற்பத்தி யை ஊக்குவிக்க இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்தின் மூலம் எத்தனை வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பது குறித்த எந்த உறுதியான தகவலும் இல்லை. பெரிய அளவிலான மின்னணு உற்பத்தி திட்டத்தின் கீழ் ரூ.8,12,550 கோடி உற்பத்தியும், ரூ.7,000 கோடி கூடுதல் முதலீடும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 2 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறப் பட்டது. ஆனால் இதுவரை ரூ.9,349 கோடி முதலீடு செய்யப்பட்டு, ரூ.6,14,115 கோடி உற்பத்தி அடையப் பட்டுள்ள நிலையில், வெறும் 1,28,688 வேலைவாய்ப்பு கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மாற்றியமைக்கப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகை திட்டத்தின் (M-SIPS) கீழ் 315 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டதில், 293 நிறுவனங்கள் மட்டுமே முதலீடு செய்துள் ளன, 275 நிறுவனங்கள் மட்டுமே உற்பத்தியைத் தொடங்கி யுள்ளன. இந்த நிறுவனங்களின் மொத்த விற்பனை ரூ.13.56 லட்சம் கோடியாக இருந்தாலும், ஏற்றுமதி வெறும் ரூ.3.16 லட்சம் கோடி மட்டுமே. மின்னணு பொருட்கள் மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்தின் (SPECS) கீழ் 52 விண்ண ப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ.14,797.62 கோடி திட்ட செலவில் வெறும் 34,670 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள், ஒன்றிய அரசின் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டங்கள் பெருநிறுவனங்களின் லாபத்தை பெருக்குவதற்கு மட்டுமே உதவுகின்றனவே தவிர, வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் எந்த குறிப்பிடத்தக்க முன் னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை தெளி வாக்குகின்றன. ஏற்றுமதியை பெருக்குவதிலும் இத்திட்டங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆத்ம நிர்பார் பாரத் என்ற பெயரில் பெருநிறுவனங்களுக்கு வழங்கப்படும் இந்த பெரும் நிதி ஆதரவு, மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகவே அமைந்துள்ளது.