states

சமூக ஊடகங்களில் பாஜகவின் கூலிப்படைகளை அம்பலப்படுத்துவோம்! - அ.அறிவுக்கடல்

நாடாளுமன்றத் தேர்தல் சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் திருவிழா என்றே  சொல்லுமளவுக்கு இருந்த தன்மை மாறிவிட்டது என்றே சொல்லலாம். பரப்புரை நேரத்திற்குக் கட்டுப்பாடு, ஒலிபெருக்கி களுக்குக் கட்டுப்பாடு, சுவரெழுத்துகளுக்குக் கட்டுப்பாடு என்று விதிக்கப்பட்டவை, ஒரு மூன்று தசாப்தங்களுக்கு முன்பிருந்த ‘தேர்தல் திருவிழா’ வடிவத்தை மாற்றியமைத்துவிட்டன.  அப்படியான மாற்றங்கள் படிப்படியாக ஒவ்வொரு தேர்தலிலும் ஏற்பட்டுக்கொண்டே வந்திருக்கின்றன. இந்த  மாறுகிற வடிவங்களை எதிர்கொள்வதில், பழைய வடிவங்களுக்குப் பழகியவர்களுக்குச் சில தொடக்க நிலை இடர்பாடுகள் இருப்பதும் இயல்பே. இந்தத் தொடக்கநிலை இடர்பாடுகள் என்பவை எல்லாத் துறைகளிலும் ஏற்படுகிறவையே. எனினும்,   பழைய வடிவத்திலிருந்து புதிய தொழில்நுட்பத்திற்கு மாறுபவர்களைவிட, நேரடியாகப் புதிய தொழில்நுட்பத்தில் செயல்படத் தொடங்குபவர்களுக்கு கூடுதல் வசதிகள் இருப்பது இயல்பே. கிட்டத்தட்ட அந்த மாதிரியான ஒரு வசதியான இடம், சமூக ஊடகங்கள் பெரும் தாக்கம் ஏற்படுத்துகிற இன்றைய தேர்தல் வடிவத்தில், பாஜகவுக்கு இருக்கிறது என்பது எவரும் மறுக்க முடியாத, மறுக்காத உண்மை. கல்வியறிவும், பொருளாதாரமும் அதிகம் வளர்ந்திராத வட மாநிலங்களில், கடவுள், மதம் என்பதான நடவடிக்கைகளின்மூலம் மக்களிடம் செல்வாக்குப் பெற்ற பாஜகவால், வளர்ச்சியடைந்த, கல்வியறிவு பெற்ற, (சாதிய) ஏற்றத் தாழ்வுகள் ஓரளவுக்கு  மறைந்துவிட்ட தென்னிந்தியாவில் மக்களை நெருங்க முடியவில்லை. ஆனால், அதே கல்வியறிவு, இணையத்தை அணுகும் வசதி ஆகியவற்றைப் பயன்படுத்தி தென்னிந்தியர் களை நெருங்குவதில், அது குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற முனைகிறது.

இளம் தலைமுறையின் கைகளில்...

அப்படி நெருங்குவது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் 96.88 கோடிப் பேர் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகள் கூறுகின்றன. இந்திய மக்கள்தொகையில் 18இலிருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள் 60 கோடிக்கும் அதிகம் என்று கடந்த ஆண்டு பிப்ரவரியில் டைம்ஸ்ஆஃப் இந்தியா வெளியிட்ட கட்டுரை குறிப்பிட்டிருந்தது. அதாவது, வாக்காளர்களில் 60 சதவீதத்திற்கும் அதிமாக உள்ள இந்த இளம் தலைமுறைதான் தேர்தலின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கப் போகிறார்கள். அதிலும் குறிப்பாக, வருகிற தேர்தலில் வாக்களிக்கப் போகிறவர்களில், இப்போதுதான் 18 வயதைக் கடந்தவர்கள் நான்கரைக் கோடிக்கும் அதிகம் என்று இந்தியா டைம்ஸ் தெரிவிக்கிறது. இவர்களில் மிகமிகப் பெரும்பான்மையினர், நாட்டின் அரசியல், பொருளாதாரம் போன்றவை குறித்து எதுவும் அறிந்திராமல், நாயக ஈர்ப்பு (ஹீரோயிசம்!) அடிப்படை யில் ‘தலைவன்’ (தங்களை ஆள்பவர்) வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள் என்று சொன்னால் அது மிகையல்ல...

அப்படியே நம்பும் ஆபத்து

இன்னும் சொல்லப்போனால், இளைஞர்களில் பெரும்பகுதியினர், தங்கள் கல்லூரிப் பாடத்திற்கு வெளியிலான அறிவை ‘வாட்ஸ்அப்’ பல்கலைக்கழகத்தில்தான் பெறு கிறார்கள். யூட்யூப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாக்ராம் போன்ற  சமூக ஊடகங்களில் பரவுகிறவற்றை அப்படியே நம்புகிற வர்களாக இருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பே, பறக்கும் டாக்சி சேவை என்று ஓலா நிறுவனம் ஓர் ஏப்ரல் ஃபூல்  செய்து, அது வைரலானது நினைவிருக்கலாம். அறிவியல், தொழில்நுட்பம் பயில்கிற மாணவர்கள்கூட அதை நம்பி, ஷேர் செய்தார்கள் என்பது மட்டுமல்ல, இன்று அப்படி நம்புகிற, ஷேர் செய்கிற பழக்கம் இன்னும் மோசமாகப் பெருகி யிருக்கிறது. அது பாஜகவிற்கு உதவுகிறது என்பதை, கடந்த தேர்தல்களின்போது, வெளிநாடுகளில் உள்ள சாலை, பாலம் போன்ற உட்கட்டமைப்புகளை குஜராத்தில் உள்ளதாகப் பரப்பிய நிகழ்வு வெளிப்படையாகவே உணர்த்துகிறது. 

பொய்களை டிரெண்ட் செய்யும் பாஜக

அப்படியான நிலையில், சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்து கையாள்வது  முக்கிய மான தேவையாக இருக்கிறது. எவ்வளவு பேர் பார்த்தார்கள், எவ்வளவு பேர் லைக் செய்தார்கள், எவ்வளவு பேர் ஷேர் செய்தார்கள் போன்றவற்றைக்கொண்டு, மேலும் பலமடங்கு பேருக்கு அதே பதிவுகளைக் காட்டுவது என்பதுதான் அனேக மாக எல்லா சமூக ஊடகங்களிலும் நடைமுறையாக உள்ளது.  லட்சக்கணக்கான போலிக் கணக்குகளை வைத்திருக்கிற பாஜகவின் ஐடி விங், அவர்களது (பொய்) பதிவுகளுக்கும் ஏராள மான லைக், ஷேர் என்று அவர்களே செய்து, அதன்மூலம், ‘ட்ரெண்ட்’ ஆகுதல் என்று குறிப்பிடப்படும் ஏராளமான வர்களுக்குக் காட்டும் செயலை நடக்க வைக்கிறார்கள்.  உதாரணமாக அக்கட்சியின் சார்பில் ஒரு பொய்ச் செய்தி ட்வீட் செய்யப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் சமூக ஊடக கூலிப்படையே அதை ட்ரெண்டும் ஆக்கிவிடுகிற நிலையில், நமக்கும், அது காட்டப்படுகிறது. உடனே நாம் அதற்கு பதில் அளிக்கத் தொடங்கிவிடுகிறோம். அதைத்தான் செய்ய வேண்டும், ஆனால், எப்படிச் செய்ய வேண்டும் என்பதுதான் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. 

எதிராளி எதிர்பார்ப்பது என்ன?

எதிராளி எதிர்பார்ப்பதை நாம் செய்துவிட்டால், நாம் தோற்பதாகப் பொருள்! உதாரணமாக, திரைப்படச் சண்டைக்காட்சியையே எடுத்துக்கொள்வோமே... ஒளிந்து கொண்டிருக்கிற நாயகன், ஒரு பொருளைத் தூக்கிப் போட்டு ஒலி ஏற்படுத்தி, அதை நோக்கித் திரும்புகிற வில்லனைத் தாக்குவாரே? அப்படித்தான் நாம் தாக்குதலுக்கு உள்ளாகிவிடுகிறோம்.  எப்படி? லைக், ஷேர் ஆகியவற்றால் மட்டும் சமூக ஊடகப் பதிவுகள் பரவுவதில்லை. அதிகமான பின்னூட்டங்கள் கொண்டவையும் சமூக ஊடகங்களால் அதிகமாகப் பரப்பப்படு கின்றன. நாம் இடுகிற பின்னூட்டங்களைப் படிப்பவர்களும் அந்தப் பொய்ப் பதிவைப் படிப்பதால், அவை சமூக ஊடகங் களால் மேலும் மேலும் பரப்பப்படுகின்றன. ஆக, அவர்களது (பொய்) பதிவைப் பரப்புகிற வேலையை நாமும் சேர்ந்து செய்வது போல் ஆகிவிடுகிறது. அதை எதிர்பார்த்துத்தான் தெரிந்தே பொய்ப் பதிவுகளை இடுகிறார்கள்.

என்ன செய்யலாம்?

அப்படியானால் எப்படி பதில் அளிப்பது? அவர்களது பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, அதனை நம் பதிலுடன் இணைக்க லாம். அல்லது, அவர்களின் பெயரை மட்டும் குறிப்பிட்டு பதில் அளிக்கலாம். அது மட்டுமின்றி, அவர்களது ஐடி(ID), ஹேண்டில்(Handle) ஆகியவற்றைக் குறிப்பிடும்போதும் அவர்களுக்கு நாமே பரப்புரை செய்கிறோம் என்று புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.  ட்விட்டரில் ஒருவரின் ஹேண்டிலைச் சேர்ப்பது என்பது அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும், அவர்களை பதில் அளிக்கச் செய்வதற்கும்தான். ஆனால், தெரிந்தே பொய் பதிவு இடுபவர்களின் கவனத்தை ஈர்க்கவும் தேவையில்லை. அதற்கு அவர்கள் பதில் அளிப்பதும் இல்லை.  இரண்டாவது, நாம் எதைப் பேச வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்ய விட்டு ஏமாறுவது. அதாவது, தெரிந்தே ஒரு பொய்யை திரும்பத் திரும்பப் பதிவிடுகிறார்கள். நம்மால்  பதில் அளிக்காமல் இருக்க முடியவில்லை. பதில் அளித்து  அதை நாம் பரப்புகிறோம். ஆனால், நாம் சொல்கிற உண்மையைக் கண்டுகொள்ளாமல் விடுவதன்மூலம், அந்த உண்மை பரவாமல் தடுக்கிற வேலையை அவர்கள் செய்கிறார்கள். அதாவது, தெளிவான சிந்தனை உள்ள ஒரு மனிதன், எதிராளி பேசுவதை உள்வாங்கி, அதற்கு பதில் அளிப்பதுதான் இயல்பு. நாம் அதைத்தான் செய்கிறோம். அவர்கள் அதைச் செய்வதில்லை.  எனவே, இன்றைய முதன்மை ஆயுதமான சமூக ஊடகங்களில் பாஜகவின் கூலிப்படையை நாம் சாதுர்யமாக எதிர்கொள்ளவும் அம்பலப்படுத்தவும் வேண்டியுள்ளது. ஒரே நேரத்தில் பாசிச அமைப்புகளில் பலத்தைக் குறைக்கவும், நம் பலத்தை உயர்த்தவும் கூடிய அணுகுமுறையைக் கவனமாக அதைச் செயல்படுத்தி, வெல்வோம்!