states

img

வாச்சாத்தி தீர்ப்பு அதிகார வர்க்கத்திற்கு எச்சரிக்கை

தருமபுரி,அக்.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ‘வாச்சாத்தி வழக்கு வெற்றிப் பொதுக்கூட்டம்’ அரூரில் அக்டோபர் 18 புதனன்று மாலை நடைபெற்றது. கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஏ.குமார் தலைமை வகித்தார். அரூர் ஒன்றிய செயலாளர் பி.குமார் வரவேற்றார். மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியகுழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.டில்லிபாபு, இரா.சிசுபாலன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தருமபுரி பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.ராதிகா, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இரா.சரவணன் ஆகியோர் சிறப்புறையாற்றினர்.  கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “வாச்சாத்தி போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தோழர்கள் ஈடுபட்டனர். இந்த வழக்கை நடத்துவதற்காக எந்த கட்டணத்தையும் பெறாமல் என்.ஜி.ஆர்.பிரசாத், ஆர்.வைகை, இளங்கோ, சம்கிராஜ், சுப்புராம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடியிருக்கிறார்கள். மனித உரிமைகளுக்காக வழக்கறிஞர்கள் போராடினார்கள். இந்த வழக்கிற்காக 30 ஆண்டுகாலம் தோழர் பெ.சண்முகம், பி.டில்லிபாபு உள்ளிட்ட தோழர்களின் பங்களிப்பு மகத்தானது.  வாச்சாத்தி கிராமத்திற்கு நேரில் சென்ற ஏ.நல்லசிவன், மைதிலி சிவராமன், பாப்பா உமாநாத் போன்றோர் அங்கு நடந்த வன்முறையை வெளி உலகிற்கு கொண்டுவந்தனர். இவர்களின் அனைவரின் பங்களிப்போடு இந்த வழக்கு வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வழக்கில் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியவர்கள் வாச்சாத்தி கிராம பெண்கள்; பொதுமக்கள்தான்: தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கேட்டு செங்கொடி உயர்த்தி போராட்டம் நடத்தியதால் வரலாற்று தீர்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாடு மட்டும் அல்ல; உலகத்திலேயே இப்படி ஒரு வழக்கை கண்டிருக்க முடியாது. வழக்கில் உள்ளவர்கள் ஒருவர் கூட விடுபடாமல் தண்டனை வழங்கப்பட்டது வாச்சாத்தி வழக்குதான். 269 குற்றவாளிகளும் உயர்நீதிமன்றம் சென்ற பிறகும் அனைவருக்கும் தண்டனை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் எல்லோருமே அதிகார வட்டாரத்தை சார்ந்தவர்கள். அதிகாரத்தில் இருக்கிற எவராக இருந்தாலும் சரி, அடித்தட்டு மக்களை ஏறி மிதித்து விடலாம் என்றால் அதிகார வர்க்கம் தப்பிக்க முடியாது’ என்கிற ஒரு எச்சரிக்கை மணிதான், இந்த வழக்கு” என்று உணர்ச்சிகரமான முறையில் குறிப்பிட்டார்.  மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சண்முகம் பேசுகையில்,  ‘வாச்சாத்தி வழக்கு தீர்ப்பை, அதிமுக இன்னும் ஏற்கவில்லை. தற்போதைய அதிமுக அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குற்றமே நடக்கவில்லை என சட்டமன்றத்தில் தெரிவிக்கிறார். அதிமுக இன்றுவரை குற்றவாளிகளை பாதுகாக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மலைவாழ் மக்கள் சங்கமும் வாச்சாத்தி சம்பவத்திற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளன.

மக்களுக்கு அநீதி நடக்கும் போது துணிச்சலாக நின்று நீதி கேட்டு போராடவேண்டும் என்ற நம்பிக்கையை வாச்சாத்தி வழக்கு தருகிறது. வன உரிமைச் சட்டம் 2006, 17 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டும் தமிழ்நாட்டில் வன உரிமை சட்டத்தை பயன்படுத்தி 8344 பேருக்கு மட்டுமே நிலைப்பட்ட மனைப்பட்டா வழங்கியுள்ளனர். பட்டா கேட்ட 19 ஆயிரம் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எனவே வன உரிமை சட்டத்தை தமிழ்நாட்டில் முழுமையாக அமல்படுத்த வேண்டும். கடந்த 8 ம் தேதி முதல்வரை நேரில் சந்தித்து வாச்சாத்தி தீர்ப்பை விரைவாக அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம்” என்றார். ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில், மலைசங்க மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாநிலதுணைசெயலாளர் ஏ.கண்ணகி, மாவட்ட செயலாளர் கே.என்.மல்லையன், மாவட்ட தலைவர் அம்புரோஸ், சிபிஎம் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், திருவண்ணாமலை மாவட்டசெயலாளர் சிவக்குமார், தருமபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து, சோ.அருச்சுணன், ஆர்.மல்லிகா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். முன்னதாக, வாச்சாத்தி வழக்கில் போராடிய தலைவர்களை, உறுதியாக நின்று போராடிய வாச்சாத்தி பெண்களுக்கு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கதராடை அணிவித்து பாராட்டினார்.