states

பேராசிரியர் மீது குற்றப் பத்திரிக்கை

சென்னை, ஜூலை 27- சென்னை கலாஷேத்ரா முன்னாள் மாணவியின் பாலியல் புகார் வழக்கில்,  பேராசிரியர் அரிபத்மன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 250 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் பலருக்கும் அங்கு பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக கூறி கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி ஏப்ரல் மாதம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.  இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு  அந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் சென்னை அடையாறு மகளிர்  காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப் படையில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி கைது செய்யப்பட்ட பேராசிரியர் அரிபத்மன் மீது  பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம்  உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் காவல்துறையினர் 50க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தி விவரங்கள் குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளனர். மேலும், 162 மாணவிகள் பெண்கள் ஆணையத் தலைவரிடம் புகாரும் கொடுத்தனர். இந்நிலையில், பேராசிரியர் அரிபத்மன்  மீது 250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரி கையை காவல்துறையினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வியாழனன்று (ஜூலை 27) தாக்கல் செய்தனர். பேராசிரியர் அரிபத்மன் கைது செய்யப்பட்டு 60 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்ததை தொடர்ந்து கடந்த ஜூன் 6ஆம் தேதி அவருக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அரிபத்மன் தினசரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருவது குறிப்பிடத்தக்கது.