மோர்பி பால விபத்தில் 55 குழந்தைகள் பலி!
மோர்பி நகரில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 பேர் வரை பலியாகினர். இந்த விபத்தில் 47 குழந்தைகள் பலியானதாக கூறப்பட்டது. இந்நிலையில், 39 சிறுவர்கள், 16 சிறுமிகள் என மொத்தம் 55 குழந்தைகள் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி யுள்ளன. மேலும், இவ்விபத்தில் 45 ஆண்களும், 35 பெண்களும் பலியாகியுள்ளனர். மோர்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 100 பேர் பலியாகியுள்ளனர். 13 பேர் ராஜ்கோட் மாவட்டத்தை யும், 10 பேர் ஜாம்நகரையும், 4 பேர் கட்ச் மாவட்டத்தையும், 2 பேர் சுரேந்திர நகர், 2 பேர் தேவபூமி துவாரகா, 2 பேர் அகமதாபாத் மற்றும் ஒருவர் ஜுனாகத் பகுதியையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்பது பாஜக அரசுதானாம்
இமாசலப் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தல் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இம்முறை நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இமாசலப் பிரதேசத்தின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கானதாக இருக்கும். பாஜக என்றால் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய அரசு என்பதை மக்கள் அறிந்திருக்கிறார்கள். எனவே, இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக அரசு அமைய வேண்டும் என்ற முடிவை அவர்கள் எடுத்துவிட்டார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரை, பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பது அதன் வாடிக்கையாகக் கொண்டுள்ளது” என்று இமா சலப்பிரதேசத்தின் மாண்டி நகரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
அமித்ஷா அமைச்சரா.. குதிரைப் பேர இடைத்தரகரா?
“தெலுங்கானாவில் ரூ. 150 கோடி ‘ஆபரேஷன் தாமரை’ பேரத்தில் சிக்கியவர், கர்நாட கத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி கவிழ்ப்பிலும் பங்காற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பி.எல். சந்தோஷ் என்பவரின் செயல்கள் தற்போது பகிரங்கமாகி வருகிறது. குதிரை பேரத்தில் பி.எல். சந்தோஷ் தலைமையிலான கூட்டம் ஈடுபட்டதால்தான் எடி யூரப்பா பதவி நீக்கம் செய்யப்பட்டாரா? அமித்ஷா உள்துறை அமைச்சரா அல்லது ஜனநாய கத்தை அழிக்கும் குதிரை பேர இடைத்தரகரா? ‘ஆபரேஷன் தாமரை’ என்ற கீழ்த்தரமான செயலில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பி.எல். சந்தோஷ் ஆகி யோரின் பெயர்கள் பகிரங்கமாகி உள்ளன. எனவே, குதிரை பேரம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற வேண்டும்” என்று கர்நாடக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மாட்டுச் சாணத்தை விலைக்கு வாங்குவதாக தேர்தல் வாக்குறுதி
இமாசலப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கி ரஸ் கட்சி தனது சிம்லா அலுவலகத்தில், தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் 1 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாத உதவித் தொகை என்பது உள்ளிட்ட 10 வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அந்த வாக்குறுதி களில் ஒன்றாக, இமாசலப் பிரதேச மாநிலத்தில், விவசாயிகளிடமிருந்து மாட்டுச் சாணம் கிலோ 2 ரூபாய்க்கு வாங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கொலீஜியம் முறையில் அரசியல் உள்ளதாக ரிஜிஜூ பேச்சு
தற்போதைய உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் முறை பார்க்கமுடியாத வகையில் வெளிப் படை தன்மையின்றி, புரிந்துகொள்ள கடினமாகவும், தெளிவற்ற நிலையில் உள்ளது. அவ்வாறு இருந்தால் அதற்கு எதிராக துறையின் அமைச்சர் பேசாமல் யார் பேசுவது?. தகுதி யானவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படவேண்டுமே தவிர கொலீஜியத்திற்கு தெரிந்தவர்கள் அல்ல. நீதிபதிகள் வெளிக்காட்டிக்கொள்ளாதபோதும் கொலீஜியம் முறையில் தீவிரமான அரசி யல் உள்ளது. நான் நீதித்துறை குறித்தோ நீதிபதி குறித்தோ விமர்சிக்கவில்லை. உச்ச நீதி மன்றத்தின் தற்போதைய கொலீஜியம் முறையில் எனக்கு மகிழ்ச்சியில்லை. சிறந்த கட்ட மைப்பிற்காக நாம் தொடர்ந்து பாடுபடவேண்டும்’ என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியுள்ளார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கார் மீது கல்வீசித் தாக்குதல்!
ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமையன்று தமது பாது காப்பு வாகனங்களுடன் பேரணியாக சென்று கொண்டிருந்த போது, என்.டி.ஆர் மாவட்டம் நந்தி கர்மா என்ற இடத்தில் கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளானார். இந்த தாக்குதலில் நாயுடுவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி (சிஎஸ்ஓ) மதுபாபு என்பவர் காயமடைந்தார். நல்வாய்ப்பாக சந்திரபாபு நாயுடு காயமின்றி தப்பினார். உடனே அருகில் இருந்த நபரிடம் இருந்த மைக்கை வாங்கிய நாயுடு, கற்களை வீசியவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்ச ரிக்கை விடுத்தார்.
கழிவுப்பொருட்களை விற்று ரூ.364 கோடி ஈட்டிய அரசு!
ஒன்றிய அரசுத் துறைகளில் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதியில் இருந்து 31-ஆம் தேதி வரை சிறப்பு தூய்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் நீண்ட காலமாக தேங்கிக் கிடந்த கழிவுப்பொருட்கள் அகற்றுதல், பழமையான கோப்புகள் ஆய்வு செய்து அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. ஒரு மாதமாக நடந்த இந்த பணிகளில் கழிவுப்பொருட்கள் விற்பனை மூலம் அரசுக்கு ரூ. 364.53 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. இதைப்போல பழமையான கோப்புகளை அப்புறப்படுத்தியதன் மூலம் 88.05 லட்சம் சதுர அடி இடமும் காலியாகி இருக்கிறது. இதில் அதிகபட்சமாக ராணுவ நலத்துறையில் இருந்து ரூ. 212.76 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. அடுத்ததாக நிலக்கரி அமைச்சகத்தின் மூலம் ரூ.48.51 கோடியும், ரயில்வே அமைச்சகம் மூலம் ரூ. 33.05 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.
மோடி என்னை பாராட்டவில்லை... உண்மையையே கூறினார்...
“நாட்டின் மிக மூத்த தலைவர்களில் அசோக் கெலாட்டும் ஒருவர். குஜராத்தின் முதல்வராக நான் இருந்தபோதே அவர் ராஜஸ்தானின் முதல்வராகவும் மூத்த தலைவராகவும் இருந்தார். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போதும் நாட்டின் மிக மூத்த முதல்வராக அவரே தொடர்கிறார்” என்று பிரதமர் மோடி அண்மையில் பேசியிருந்தார். கெலாட்டைப் பாராட்டும் மோடியின் இந்தப் பேச்சை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று காங்கிரசின் மற்றொரு தலைவரான சச்சின் பைலட் கூறியிருந்தார். இந்நிலையில், “பிரதமர் மோடி என்னை மூத்தத் தலைவர் என்று தானே கூறினார். இதில் பாராட்டு என்ன இருக்கிறது? அவர் உண்மை யைத் தான் கூறினார். அவர் ஒன்றும் எனது செயல்பாட்டைக் குறிப்பிட்டுப் பாராட்டு தெரிவிக்க வில்லை” என அசோக் கெலாட் பதிலளித்துள்ளார்.
குஜராத் போட்டியிலிருந்து விலகினால் வழக்குகள் வாபஸ்
அடுத்த மாதம் நடைபெற உள்ள குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிலிருந்து விலகிக் கொண்டால், ஒன்றிய அமைப்புகளின் விசாரணையில் சிக்கியுள்ள தனது அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரை காப்பாற்றுவதாக பாஜக பேரம் பேசியதாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் குண்டை வீசியுள்ளார்.
ஆட்டோ-லாரி மோதல் ஏழு பெண்கள் பலி
பெங்களூரு, நவ.5- கர்நாடக மாநிலம் பிடார் மாவட்டம் சித்தகுமா தாலுகாவைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் வெள்ளிக் கிழமை மாலை வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். பிமலஹிடா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த போது சாலையில் எதிரே வந்த லாரி, ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பய ணித்த பார்வதி (40), பிரபாவதி (36), குண்டம்மா (60), யாதம்மா (40), ஜக் கம்மா (34), ஈஸ்வரம்மா (55), ருக்மணி பாய் (60) என மொத்தம் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி, ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட 11 பேர் படு காயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ் நோக்கம்: அமைச்சர் விளக்கம்
சென்னை, நவ.5- தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கம் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். சென்னையில் பருவ கால மருத்துவ முகாமை சனிக்கிழமை தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதா வது, பருவமழை முடிந்தவுடன் சாலை கள் அமைக்கும் பணி தொடங்கும். சென் னையில் வெள்ளியன்று விபத்துக் குள்ளான பாழடைந்த கட்டடம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மக்களை பற்றி அக்கறை இல்லாமல், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தி கலவரம் ஏற்படுத்த நினைக்கின்றனர். ஆனால் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க முதலமைச்சர் அனைத்து முடிவும் எடுப்பார் என்றார் சேகர்பாபு.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி தேர்வு
சென்னை, நவ.5- தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளராகவும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைத்தலைவராகவும் இருந்த வர் அசோக் சிகாமணி. தமிழ்நாடு கிரிக் கெட் சங்கத்தில் அதிகாரமும் பலமும் மிக்க இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசன் அணியை சேர்ந்தவர் அசோக் சிகாமணி. சனிக்கிழமை தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், தலைவர் பதவிக்கான போட் டியில் இருந்த பிரபு தனது மனுவை திரும்பப் பெற்று தேர்தலில் இருந்து ஒதுங் கினார். இதையடுத்து போட்டியின்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வானார். செயலாளராக பழனியும், பொருளா ளராக ஸ்ரீநிவாச ராவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது: நீதிபதி
சென்னை, நவ.5- புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கா மல் காலதாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் பணியாற்றிய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜ், கடந்த 2016-ம் ஆண்டு பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பி செலுத்தும் வகையில் மோகன்ராஜ் காசோலை கொடுத்ததாகவும், ஆனால் அவர் அளித்த காசோலை வங்கி கணக்கில் பணம் இல்லாததால் திருப்பி வந்ததாகவும் அப்போதைய தலைமை செயலாளரிடம் பைனான்சியர் போத்ரா புகார் அளித்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் கடந்த 2016-ம் ஆண்டு போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, புகார் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரி கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட் டார். மேலும் புகார்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்வது அரசியல் சாசனத் திற்கு விரோதமானது என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மாணவி படுகொலை: குண்டர் தடுப்புச்சட்டத்தில் இளைஞர் கைது
சென்னை, நவ.5- சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரயிலில் தள்ளி கொலை செய்யப் பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சதீஷ் என்ற இளைஞரை காவல்துறை யினர் கைது செய்தனர். தற்போது நீதிமன்ற காவலில் உள்ள சதீசை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காணொளி மூலமாக அவர் ஆஜர்படுத்தப்பட்டார். காவல்துறையின் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து சதீஷை சிறையில் இருந்து சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்நிலை யில், கைதான சதீஷ் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது. சிபிசிஐடி போலீசாரின் பரிந் துரையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
18 மாவட்டங்களில் இன்று கனமழை
சென்னை, நவ.5- வளிமண்டல கீழக்கு சுழற்சி காரண மாக தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஞாயிறன்று அநேக இடங்க ளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அந்த மையம் கூறியுள்ளது.