states

பண வீக்கத்தில் விழி பிதுங்கி நிற்கும் மக்களின் வருமானம் உயரவில்லை! இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கம்

அரசாங்கம் அளிக்கும் ஒட்டுமொத்த ஜிடிபி  (மொத்த உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சி விவரங்கள் ஆச்சரியம் ஊட்டுகிறது. ஆனால் அதன் உள்ளடக்கம் உண்மை நிலையைப் போட்டு உடைக்கிறது!

2023-24 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஒட்டுமொத்த மதிப்பீடுகளையும் விட இது அதிகம் .ஆனால் 2021-22, 2022-23 ஆம் ஆண்டுகளில் அது குறைக்கப்பட்டதால் தற்போது அதிகரிப்பு என்ற தோற்றத்தை  தருகிறது. இந்த உண்மையை (மோடி) அரசு மறைக்கப் பார்க்கிறது. அதேபோல நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 8.4 சதவீத வளர்ச்சி என அரசு கூறுவதை அப்படியே ஏற்க முடியாது .மிகவும் கவனமாக அதை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

மக்களை கசக்கிப் பிழியும் மோடி அரசு!

இந்த முன்னேற்றம் உற்பத்தியின் அதிகரிப்பின் மூலம் வந்தது அல்ல. மக்களை கசக்கிப் பிழிந்து அதிக வரியை அவர்களிடம் இருந்து வசூலித்ததால் கிடைத்தது.மானியங்கள் வெட்டி சுருக்கப்பட்டதும் மற்றொரு முக்கிய காரணம். நான்காவது காலாண்டில் கூட அரசாங்கம் தனது செலவினங்களை அதிகப்படுத்தவில்லை. எனவே இப்போதும் வளர்ச்சி 5.9% ஆகவே பதிவு செய்யப்படும்.

நெருக்கடியில் வேளாண் துறை!

வளர்ச்சி பற்றிய புள்ளி விவரங்கள் ‘மதிப்பிற்குரியதாக’ இருக்கலாம். ஆனால் வளர்ச்சி சமச்சீராக இல்லை என்பதை மேலோட்டமாகப் பார்த்தாலே புரியும். வேளாண்துறை மற்றும் அதை சார்ந்த துறைகளில் உற்பத்தி மிக மிகக் குறைவாக இருக்கிறது. துயரமிக்க சமிக்ஞைகளை அது வெளிப்படுத்துகிறது. மூன்றாம் காலாண்டில் அது மேலும் சுருங்கிவிட்டது. விளைவு? ஒட்டுமொத்த வறுமையை அது அதிகரித்துள்ளது. 2023-24 ஆம் ஆண்டு  முழுவதும் அதன் வளர்ச்சி 1.2% அளவிற்கு மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறது. மூன்றாம் காலாண்டில் பண்டிகை காலங்களில் கூட கடந்த ஆண்டில் 7.1% அளவுக்கு விரிவடைந்தது போல இந்த ஆண்டு அது விரிவடையவில்லை. 3.5 சதவீதம் ஆக மிகவும் பலவீனமாக இருந்தது. மறுபுறம் தனியார் முதலீடு, நுகர்வைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. கனரகப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் கட்டுமானத்துறையின் விரிவாக்கம் வளர்ச்சிக்கு உதவியிருக்கலாம்.

தனிநபர் நுகர்வு உயரவில்லை

ஆனால், பரந்துபட்ட அடிப்படையிலான வளர்ச்சி நமக்கு தேவை. அப்போதுதான் அனைத்து துறைகளும் அதன் ஆற்றலுக்கு ஏற்ப வளர்ச்சியில் பங்கேற்கும். தனிநபர் நுகர்வு என்பது இதில் ஒரு முக்கிய அம்சம், மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 57 சதவீதம் என்ற கணிசமான அளவை கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தனிநபர் நுகர்வு உயரவில்லை. 5.5 சதவீதத்தை அது தாண்டுமா என்பதும் கேள்விக்குறியே!

ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும்!

அரசாங்கம் தனிநபர்களின் நுகர்வைச் சுருக்குகின்ற நிலையில் வளர்ச்சியின் வேகம் சமச்சீராக இருக்கப் போவதில்லை. தனி மனிதர்களின் நுகர்வு வேகம் பெறாத வரை வளத்தையும் சீரற்ற தன்மையும் மாறப்போவதில்லை. நுகர்வு விகிதம் 4.4 சதவீதத்தில் இருந்து 3  சதவிகிதமாக குறையும் என்று மதிப்பீடுகள் வருகின்றன. தற்போதைய மோடியின் ஆட்சியில் மக்களின் வருமானம் தேக்க நிலையில் இருக்கிறது. பணம் வீக்கத்தால் அவர்கள் விழிப்பிதுங்கி நிற்கின்றனர்.

தமிழில்: கடலூர் சுகுமாரன்