புவனேஸ்வர், ஜூன் 5- ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. திங்களன்று மாநில அமைச்சர்கள் 20 பேரும் கூண்டோடு பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா கடிதங்கள் சட்டமன்ற சபாநாயகரிடம் அளிக்கப்பட்டுவிட்டது. நவீன் பட்நாயக் மொத்தமுள்ள ஐந்தாண்டில் தமது மூன்றாண்டு காலத்தை 2022-ஆம் ஆண்டு மே29-ஆம் தேதியோடு நிறைவு செய்தார். 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்த அமைச்சர்களை கூண்டோடு ராஜினாமா செய்யச் சொல்லி வலியுறுத்தியதால் இந்த முடிவை அமைச்சர்கள் எடுத்துள்ளனர். இந்த நிலையில் புதிய அமைச்சர்கள் ஞாயிறன்று பதவியேற்றுக் கொண்டனர். முதல்வராக நவீன்பட்நாயக், ஜெகநாத் சரகா, நிரஞ்சன் பூஜாரி மற்றும் ஆர்பி ஸ்வைன் உள்ளிட்ட 21 பேர் அமைச்சர்க ளாக பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் கணேஷி லால் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த அமைச்சரவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் இரண்டாக இருந்தது. தற்போது அது ஐந்தாக உயர்ந்துள்ளது.