states

சமூகப் பொறுப்பா? எதிர்காலச் சுமையா? - க.சுவாமிநாதன்

பங்களிப்பு இல்லாத பென்சன் திட்டங்கள் எல்லாம் எதிர்காலத் தலைமுறை மீதான  சுமை என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் கூறி இருக் கிறார்.

அரசியல் பிரச்சாரம்

சில எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள், பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் முடிவை எடுத்துள்ள பின்னணியில் சஞ்சீவ் சன்யால் இந்த கருத்தை சொல்லி இருக்கிறார். அவர் பொருளாதார ஆலோசகர் என்றாலும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் முடிவுகளுக்கு எதிரான அரசியல் பிரச்சாரமாகவே அவர் கருத்தை  வெளியிட்டு இருக்கிறார்.  சட்டமன்றத் தேர்தல்களின் போது நாங்கள் “புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வோம்” என்ற வாக்குறுதியை மக்கள் முன் வைத்து ஆட்சிக்கு வந்த பின்னணியில்தான் எதிர்க்கட்சி மாநில அரசுகள் இந்த முடிவை எடுத்துள்ளன. ஆகவே சன்யால் போன்றவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களின் செயல் பாடுகள் பற்றி பொது வெளியில் இப்படி விமர்சிப்பது தார்மீகம் அல்ல. அவரிடம் ஆலோசனை கேட்கப்படுகிற சபைகளில் பேசலாம். இல்லை, இது அவருடைய பொருளாதார கருத்து எனில் ஒன்றிய அரசின் குழுவை விட்டு வெளியே வந்து விட்டு பின்னர் பேசலாம். இல்லை, இப்படிப் பேசுவ தற்காகத்தான் அப்படிப்பட்ட பதவி அவருக்கு தரப்பட்டு இருக்கிறதென்று அவர் கருதுவாரே யானால் அவரிடம் தார்மீகம் பற்றி பேசுவதை நாம் நிறுத்திக் கொள்ளலாம். 

யார் எதிர்காலத் தலைமுறை?

இவர் தலைமுறைகளைப் பிரிக்க முயற்சிக் கிறார். மூத்த குடி மக்கள் என்றால் அவர்கள் யார்? மகள், மகன், பேத்தி, பேரன், கொள்ளுப் பேத்தி, கொள்ளுப் பேரன்களின் மூத்த குடும்ப உறுப்பினர்கள்தானே. ஆகவே எதிர்காலத் தலை முறையின் மீது சுமை என்ற வாதம் நியாய மானதா? பென்சன் கிடைக்க வாய்ப்பில்லாத குடும்பங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு கூட சமூக பென்சன் திட்டங்களை பலப்படுத்துவது தானே அரசின் பொறுப்பாக இருக்க முடியும். அரசு ஊழியர், பொதுத் துறை ஊழியர்களுக்கு மட்டும்தானே இப்பிரச்சனை என்றால் அப்போதும் கூட தனியார் துறை ஊழியர்களுக்கும் பாது காப்பான எதிர்காலம் வேண்டுமென்றுதானே ஒரு அரசு சிந்தித்திருக்க வேண்டும். ஆகவே எதிர்காலத் தலைமுறை பற்றிய அரசின் கண்ணீர் முதலைக் கண்ணீர்தான். உண்மையில் அரசு மூத்த குடிமக்களுக்கு சமூக பாதுகாப்பை மறுக்கும் போது, பாதுகாக்கப்பட்ட பென்சனை மறுக்கும் போது, ரயில் கட்டண சலுகையை மறுக்கும் போது அந்த சுமை யார் மீது விழுகிறது? அவர்களின் குடும்பங்களில் உள்ள எதிர்காலத் தலைமுறை மீதுதானே.  அப்படியெனில் அரசு சொல்வது என்ன? உன் தாத்தாவை, உன் பாட்டியை அரசு ஏன் கவனிக்க வேண்டும் என்பதுதான். மூத்த குடிமக்கள் இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றி இருக்கிறார்கள்; அவர்களின் நலனைப் பேணுவது ஒரு சமூக நல அரசின் பண்பு என்ற புரிதல் காற்றில் பறக்கிறது. 

உண்மையான அக்கறையா?

உண்மையிலேயே சஞ்சீவ் சன்யாலுக்கு எதிர்காலத் தலைமுறை மீதான சுமையை பற்றி கவலை இருக்கிறதா? அப்படி இருந்தால் நிகழ் காலத் தலைமுறை மீது இவர்களின் பொருளாதா ரப் பாதை சுமத்துகிற சுமைகள் பற்றி ஏன் வாய் திறப்பதில்லை?   இந்தியாவில் செல்வக் குவிப்பு  எவ்வளவு பாரபட்சமான வருமான பங்கீடை செய்கிறது என்பதை பேசுகிறாரா? 22 ஆண்டு களில் குவிக்காத செல்வத்தை கோவிட் கால இரண்டு ஆண்டுகளில் இந்திய பில்லியனர்கள் குவித்து இருக்கிறார்களே! மக்களின் துயரைக் கூட வாய்ப்பாக பயன்படுத்துகிற குரூரம் அவரின் மனதை அசைக்காதா? உலகம் முழுவதும் சூப்பர் ரிச் வரிகள் போட வேண்டும், அதிகரிக்க வேண்டும் என்ற சிந்தனை எழுந்துள்ள காலத்தில் இங்கே குறைக்கப்பட்ட கார்ப்பரேட் வரிகளையாவது கோவிட் பாதிப்புகளை எதிர்கொள்ள சற்று அதிக ரிக்கலாம் என்று அவர் அரசுக்கு ஆலோசனை கூறினாரா? சர்வதேசச் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்த போதும் இங்கே “செஸ்” வரிகளை உயர்த்தி மக்கள் வயிற்றிலும், மாநில நிதி பகிர்விலும் ஒரே நேரத்தில் அடித்தார்களே அதைப் பற்றி முணு முணுக்கவாவது செய்தாரா?  இதெல்லாம் நிகழ் காலத் தலைமுறை மீது எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது! இவர்களின் குழந்தைகள்தானே எதிர்காலத் தலைமுறை! 

மூளையின் ஒரு மடிப்பாவது...

சஞ்சீவ் சன்யால் அவர்களே!  பங்களிப்பு இல்லாத பென்சன் திட்டங்களை சுமை என்கிறீர்களே, பங்களிப்பு இருந்த இடங்க ளிலும் புதிய பென்சன் திட்டம் கொண்டு வரப்பட்டதே! உங்கள் புதிய பென்சன் திட்டத்தின் முன்னுரையில் ஊழியர்களின் பங்களிப்புகளுக்கே திரும்பக் கிடைக்குமா என்ற உத்தரவாதம் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளதே! ஆகவே வரையறுக்கப்பட்ட பென்சன் என்பதே கூடாது என்பதே அமலாக்கப் பட்டு வருகிறது. எல்லா சேமிப்புகளும் சர்வதேச நிதி மூலதனத்தின் சூதாட்ட மேசைக்கு வர வேண்டும் என்பதுதான் பென்சன் சீர் திருத்தங்க ளின் நோக்கம் என்பது உங்கள் பொருளாதார ஞானத்திற்கு எட்டாததா! உங்கள் பொருளாதார மூளையின் ஒரு மடிப்பாவது சாதாரண மக்களுக்காக சிந்திக்க வேண்டாமா?  ஒன்றிய அரசின் பொருளாதாரப் பாதைக்கு எதிராக உங்களால் பேச முடியும் என்ற எதிர் பார்ப்பு எங்களிடம் இல்லை. ஆனால் மாநில அரசுக ளாவது மக்களின் எதிர்ப்புகளை உணர்ந்து எடுக்கும் முடிவுகள் குறித்து பேசாமலாவது இருங்கள்!